டிடிஎச் (DTH) எனப்படும் டைரக்ட் டூ ஹோம் (Direct To Home) சேவையைப் போல டேட்டா இணைப்பு இல்லாமல் செல்போனில் டிவி சேனல்களை நேரடியாக ஒளிபரப்புவதற்கான சாத்தியக் கூறுகளை மத்திய அரசு ஆராய்ந்து வருகிறது. மொபைல் போன் பயனர்கள் கேபிள் அல்லது டிடிஹெச் (DTH) இணைப்பு மூலம் தங்கள் மொபைல் போன்களில் டிவி பார்க்க வழிவகுக்கும் டி2எம் (D2M) எனப்படும் டைரக்ட் டூ மொபைல் (Direct-2-Mobile) தொழில்நுட்பம் குறித்து மத்திய அரசு ஆய்வு செய்து வருவதாக கூறப்படுகிறது.
தொலைத்தொடர்புத் துறை, தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் மற்றும் ஐஐடி-கான்பூர் ஆகியவை இணைந்து இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும், தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இந்த திட்டத்தை எதிர்ப்பதற்கான வாய்ப்பு உள்ளது. இன்டர்நெட் பயன்பாட்டில் வீடியோ ஸ்ட்ரீமிங் மூலம் அதிக வருவாய் ஈட்டும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இந்தத் தொழில்நுட்பத்தைக் கொண்டுவருவதால் பாதிக்கப்படும்.
இதற்கிடையே, “நாங்கள் சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து வருகிறோம். டெலிகாம் ஆபரேட்டர்கள் உட்பட அனைத்து தரப்பினரையும் சந்தித்த பிறகு இறுதி முடிவு எடுக்கப்படும்” என்று சம்பந்தப்பட்ட மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஐஐடி-கான்பூர் அதிகாரிகளும் தொலைத்தொடர்பு மற்றும் ஒளிபரப்புத் துறைகளின் பிரதிநிதிகளும் அடுத்த வாரம் இந்த டைரக்ட் டூ மொபைல் தொழில்நுட்பம் பற்றிய ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்தவுள்ளதாக கூறப்படுகிறது. ஒளிபரப்பு மற்றும் பிராட்பேண்ட் சேவைகள் ஒருங்கிணைக்கப்பட வேண்டும் என்று அரசு விரும்புவதாக இத்துறை சார்ந்த அதிகாரிகள் கூறுகின்றனர்.