ராமநாதபுரம் மாவட்டம் குண்டுக்கரை பகுதியில் உள்ள சுவாமிநாத சுவாமி கோவிலில், அதிசய வடிவில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இந்தக் கோவிலில் 11 திருமுகங்களும், 22 திருக்கரங்களும் கொண்ட முருகன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளது. இத்தகைய விஸ்வரூபம் காணப்படும் ஒரே தலம் இதுவாகும்.
பொதுவாக முருகப்பெருமான் பெரும்பாலான தலங்களில் ஒற்றை முகத்துடன், சில இடங்களில் மட்டும் இரு அல்லது மூன்று முகங்களுடன் காட்சி தருவார். ஆனால் குண்டுக்கரையில், மிகவும் விசித்திரமாக, பன்னிரண்டு கரங்களோடு 11 முகங்கள் கொண்டுள்ள உருவம் பக்தர்களை வியப்பில் ஆழ்த்துகிறது.
புராணத்தின் படி, சூரபத்மனை வதம் செய்யும் முன்னே முருகன் இத்தலத்திற்கு வந்து, விஸ்வரூபம் எடுத்ததாக கூறப்படுகிறது. இந்த விஸ்வரூபத்திலேயே, அதாவது 11 முகங்களும் 22 கரங்களுடனும், முருகன் இங்கு சன்னிதி கொடுக்கிறார். மற்ற தலங்களில் முருகன் குழந்தையாக, சிவபெருமானின் மடியில் அமர்ந்திருப்பது போல காணப்படும் நிலையில், இத்தலத்தில் பிரணவ மந்திரத்திற்குப் பொருள் கூறும் முறையில், குன்றின் மீது நின்று உபதேசிக்கிறார்.
சிவபெருமான் அந்த உபதேசத்தை கேட்டுக் கொண்டிருக்கும் நிலையில் அமைக்கப்பட்டுள்ளார். இது இந்தத் தலத்தின் பிரத்யேகமாகும். மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்பு, ராமநாதபுரத்தை ஆண்ட பாஸ்கர சேதுபதி என்பவர், சுவாமிமலை முருகனை தரிசித்த பின்னர், கனவில் முருகப்பெருமான் தோன்றி வழிகாட்டியதாக கூறப்படுகிறது.
அதன்படி, குண்டுக்கரையில் உள்ள பழைய சிலையை அகற்றி, புதிதாக 11 முகங்கள், 22 கரங்களுடன் கூடிய சிலையை உருவாக்கி பிரதிஷ்டை செய்தார். அதனுடன், சுவாமிமலை முருகனின் பெயரான “சுவாமிநாதன்” என்றே இங்கு முருகன் அழைக்கப்படுகிறார்.
Read more: கன்னட மொழி குறித்த என் பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது..!! – கமல்ஹாசன் விளக்கம்