1946ம் ஆண்டு ஜூன் 4ம் தேதி ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே உள்ள கொனேட்டம்பட்டுவில் பிறந்தவர் எஸ்பிபி. எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்பிபி என்றும், பாலு என்றும் மக்களிடையே பிரபலமான அவரின் முழுப்பெயர் ஸ்ரீபதி பண்டிதாரத்யுல பாலசுப்ரமணியம் ஆகும். அவரது பெற்றோர் பெயர் எஸ் பி சம்பமூர்த்தி மற்றும் சகுந்தலம்மா.
சிறு வயது முதலே இசையுடன் வளர்ந்தார் எஸ்பிபி. பொது நிகழ்ச்சிகளிலும் பாடி பரிச்சயம் பெற்றார். முறையான சாஸ்திரீய சங்கீதம் கற்கவில்லை என்றாலும் இசையில் அபரிமித ஞானம் பெற்றிருந்தார். பொறியியல் படிப்பு முடித்து அரசு வேலை பெறுவதே அவரது லட்சியமாக இருந்தது. இசைத் துறையில் நுழையும் எண்ணம் அப்போது அவருக்கு இல்லை. கல்லூரியில் படிக்கும்போது, நண்பர் ஒருவர், அவரது பெயரை இசைப் போட்டியில் கொடுக்க, அதில் கலந்துகொண்டு பரிசும் பெற்றார். அந்தப் போட்டிக்கு நடுவராக வந்திருந்தவர் பாடகர், இசையமைப்பாளர் எஸ்.பி.கோதண்டபாணி.
எஸ்பிபியின் திறமையை பார்த்த அவர், தான் இசையமைத்த ‘ஸ்ரீ ஸ்ரீ மரியாத ராமண்ணா’ என்ற தெலுங்கு படத்தில் பாடகராக அறிமுகம் செய்தார். பிறகு கன்னட மொழியிலும் பாடகராக அறிமுகமானார். 3 ஆண்டுகள் கழித்து 1969-ல் தமிழில் பாட ஆரம்பித்தார். தமிழில் இவர் முதலில் பாடியது ‘ஹோட்டல் ரம்பா’ என்ற திரைப்படத்துக்காக, எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் எல்.ஆர்.ஈஸ்வரியுடன் இணைந்து ‘அத்தானோடு இப்படி இருந்து’ என்ற பாடலே. ஆனால் இந்தத் திரைப்படம் வெளியாகவே இல்லை.
பாடினார். ஆனால், எம்ஜிஆரின் ‘அடிமைப்பெண்’ திரைப்படத்தில் வரும் ‘ஆயிரம் நிலவே வா’ என்ற பாடலே எஸ்பிபியின் பெயரை தமிழகமெங்கும் பிரபலமாக்கியது. இத்தனைக்கும், அந்த பாடல் பாட ஒப்பந்தம் செய்யப்பட்ட பிறகு டைபாய்டு காய்ச்சல் வந்து ஒரு மாதம் ஓய்வில் இருந்தார் எஸ்பிபி. ‘‘பட வேலைகள் தாமதம் ஆகிறதே, பாடகரை மாற்றிவிடலாமா?’’ என்று எம்ஜிஆரிடம் படக் குழுவினர் கேட்டதற்கு, ‘‘வேண்டாம். அவர் இந்த பாடலுக்கு ஒத்திகை பார்த்த பிறகு தன் கல்லூரியில், நண்பர்களிடம் எல்லாம் சந்தோஷமாகப் பாடிக் காட்டியிருப்பார்.
திடீரென அவரை மாற்றிவிட்டு, வேறொருவரை பாடவைத்தால், எம்ஜிஆருக்கு அந்த பையனின் குரல் பிடிக்கவில்லை போல என்று பேசுவார்கள். அது அவரது எதிர்காலத்துக்கு நல்லதல்ல. பொறுமையாக குணமாகி வந்து அவரே பாடட்டும். அதுவரை காத்திருப்போம்’’ என எம்ஜிஆர் கூறியுள்ளார். இதை நெகிழ்ச்சியோடு எஸ்பிபியே ஒரு பேட்டியில் கூறியுள்ளார். அதற்கேற்ப, ‘ஆயிரம் நிலவே’ பாடலும் சூப்பர்ஹிட்டாக அமைந்தது.
தொடர்ந்து மலையாளத்திலும் அறிமுகமாக, முக்கிய தென்னிந்திய மொழிகள் நான்கிலும் தொடர்ந்து பாட ஆரம்பித்தார் எஸ்பிபி. திரைப்பட இசையமைப்பாளர்கள் அனைவருக்கும் பிடித்தமான, அனைவரும் விரும்பி கேட்கக்கூடிய பாடகராக குறுகிய காலத்திலேயே உருவெடுத்தார். தாய்மொழி தெலுங்கைவிட கன்னடத்தில் எஸ்பிபி மிக பிரபலம். ஒரே நாளில் கன்னடத்தில் 17 பாடல்களை எஸ்பிபி பாடி பதிவு செய்திருப்பதாக செய்தி உண்டு. படகா, கொங்கணி, துளு உள்ளிட்ட 14 இந்திய மொழிகளில் மொத்தம் 40,000-க்கும் அதிகமான பாடல்களைப் பாடியுள்ளார் எஸ்பிபி.
நிலவை மையமாக வைத்து, எஸ்.பி.பி., பாடிய, 250க்கும் மேற்பட்ட பாடல்கள், ‘சூப்பர் ஹிட்’ ஆனது. ‘ஆயிரம் நிலவே வா, இளையநிலா பொழிகிறதே, வா வெண்ணிலா, நிலாவே வா, வண்ணம் கொண்ட வெண்ணிலவே, கண்ணுக்குள் நுாறு நிலவா, நிலவு துாங்கும் நேரம், பாடு நிலாவே, வெள்ளி நிலவே, வான் நிலா நிலா, வானிலே தேன் நிலா…’ போன்ற பாடல்கள் ரசிகர்கள் நெஞ்சை விட்டு அகலாதவை.
1980-ல் ‘சங்கராபரணம்’ திரைப்படத்தில் கர்னாடக இசையை மையமாகக் கொண்ட பாடல்களைப் பாடி முதல்முறையாக சிறந்த பாடகர் என்ற தேசிய விருதை ‘ஓம்கார நாதானு’ பாடலுக்காக பெற்றார். அடுத்த ஆண்டே ‘ஏக் துஜே கே லியே’ இந்தி படத்தின் ‘தேரே மேரே பீச் மே’ பாடலுக்காக தேசிய விருதை மீண்டும் வென்றார். அதுமுதல் இந்தியிலும் எஸ்பிபி குரலுக்கு வரவேற்பு கூடியது. தேசிய அளவில் முக்கியமான பாடகர் என்ற அந்தஸ்துக்கும் உயர்ந்தார். சல்மான் கானின் ஆரம்பகால காதல் படங்களில் பல பாடல்களை பாடியுள்ளார். ‘சாகர சங்கமம்’, ‘ருத்ரவீணா’ (தெலுங்கு), ‘சங்கீதசாகர கனயோகி பஞ்சாக்ஷர கவை’ (கன்னடம்), ‘மின்சார கனவு’ படத்தின் ‘தங்கத் தாமரை மகளே’ பாடல்களுக்கும் எஸ்பிபிக்கு தேசிய விருது கிடைத்திருக்கிறது. மொத்தம் 6 தேசிய விருதுகள், பத்ம, பத்ம பூஷண் என தேசிய அளவில் உயரிய அங்கீகாரங்களை பெற்ற எஸ்பிபி 6 முறை ஃபிலிம்ஃபேர் விருதையும் வென்றவர்.
இதுதவிர, சிறந்த பாடகர், டப்பிங் கலைஞர், இசையமைப்பாளர், உறுதுணை நடிகர் என பல்வேறு பிரிவுகளில் ஆந்திர மாநில அரசின் ‘நந்தி’ விருதுகளை 25 முறை பெற்றுள்ளார். தமிழக அரசின் ‘கலைமாமணி’ பட்டத்தோடு சேர்த்து 4 முறை சிறந்த பாடகருக்கான தமிழக அரசின் மாநில விருது, 3 முறை கர்நாடக அரசின் மாநில விருதுகளை பெற்றுள்ளார். கவுரவ டாக்டர் பட்டம், வாழ்நாள் சாதனையாளர் விருதுகள் என எண்ணற்ற விருதுகள் எஸ்பிபியை தேடி வந்துள்ளன.
திரைப் பாடல்கள் மட்டுமின்றி, ஆயிரக்கணக்கான பக்திப் பாடல்கள், சம்ஸ்கிருத ஸ்லோகங்கள், தொலைக்காட்சித் தொடர் முகப்பு இசைப் பாடல்கள் என அதிலும் தனக்கென தனியொரு இடத்தைப் பிடித்துள்ளார் எஸ்பிபி. மொத்தம் 45 படங்களுக்கு இசையமைப்பாளராகவும் பங்காற்றியுள்ளார். சில தமிழ், தெலுங்கு படங்களை தயாரித்தும் வெற்றி கண்டுள்ளார். பல நாடுகளில் ஆயிரக்கணக்கான மேடை நிகழ்ச்சிகளிலும் பாடியுள்ளார்.
‘மன்மத லீலை’ தெலுங்கு டப்பிங்கின்போது நாயகன் கமல்ஹாசனுக்கு பின்னணி குரல் கொடுத்ததன் மூலம் டப்பிங் கலைஞராகவும் மாறினார். அன்றுமுதல் இன்று வரை, தெலுங்கில் டப்பிங் செய்யப்படும் பெரும்பாலான கமல் படங்களில் அவருக்கு பின்னணி பேசியிருப்பது எஸ்பிபிதான். இதுதவிர இன்னும் பல படங்களில் பல நடிகர்களுக்கு, 100 படங்களுக்கும் மேல் பின்னணி பேசியுள்ளார். தமிழில் வெளியான ‘, ராஜ்யம்’ படத்தில் நாயகன் பாலகிருஷ்ணாவுக்கு பின்னணி குரல் கொடுத்தார்.
அடிமைப் பெண்ணில் ஆரம்பித்த எஸ்பிபியின் தமிழ் திரையுலகப் பாடல் பயணம் தற்போது அண்ணாத்தே’வோடு முடிவடைந்திருக்கிறது. எம்.ஜி.ஆரில் ஆரம்பித்து ரஜினி, கமல் காலத்தில் ராஜ்ஜியம் செய்து இன்றைய இளம் நாயகர்களுக்கும் பாடல்களைப் பாடியுள்ளார் எஸ்பிபி. ஐந்து தலைமுறை இசையமைப்பாளர்களுடன் பணியாற்றியவர் என்ற பெருமையும் எஸ்பிபிக்கு உள்ளது. தொழிலையும் தாண்டி திரையுலக நண்பர்களுடன் உரிமையுடன் பழகியவர் எஸ்பிபி.
தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல படங்களில் நடிகராகவும் முத்திரை பதித்துள்ளார். ‘மனதில் உறுதி வேண்டும்’, ‘கேளடி கண்மணி’, ‘சிகரம்’, ‘குணா’, ‘திருடா திருடா’, ‘ரட்சகன்’, ‘நாணயம்’ என பல படங்களில் இவரது நடிப்பு கவனம் பெற்றது. சில தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். தெலுங்கில் ஈநாடு தொலைக்காட்சியில் ‘பாடுதா தீயகா’ என்ற என்ற பாட்டுப் போட்டி நிகழ்ச்சியை 20 ஆண்டுகளுக்கு மேலாக தொகுத்து வழங்கினார். இந்தியாவில் ஒரே தொகுப்பாளரால் அதிக ஆண்டுகள் நடத்தப்பட்ட 2-வது நிகழ்ச்சி என்ற பெருமையும் இந்த நிகழ்ச்சிக்கு உண்டு. தமிழிலும் சில ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் கவுரவ நடுவராக பங்கேற்றுள்ளார்.
கடந்த 2020ம் ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி எஸ்.பி.பிக்கு கரோனா தொற்று உறுதியாகி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், பலனளிக்காமல் செப்டம்பர் 25, 2020 மதியம் 1:04 மணிக்கு காலமானார். பாட்டுத்தலைவனாக சிகரம் தொட்டவர் எஸ்.பி.பாலசுப்ரமணியம். காலையில் சுப்ரபாதமாக, மாலையில் துள்ளல், ‘டிஸ்கோ’ கீதங்களாக, இரவில் நிம்மதியாக உறங்க தாலாட்டு பாடலாக வீட்டுக்கு வீடு கேட்டுக் கொண்டே இருக்கும் பாலுவின் பாட்டு. கற்கண்டு குரலால் கோடிக்கணக்கான ரசிகர்களின் உயிரில் கலந்தவர்.
படம் ஃபிளாப்பானாலும் எஸ்பிபியின் பாடலுக்காகவும் இளையராஜா இசைக்காகவும் எவ்வளவோ திரைப்படங்கள் ஓடின. உதய கீதம் திரைப்படத்தில் சங்கீத மேகம் தேன் சிந்தும்.. ஆகாயம் பூக்கள் தூவும் கார் காலம் என்ற பாடலை இளையராஜா இசையில் எஸ்பிபி பாடினார். இப்படி இவரது சாகாவரம் பெற்ற பாடல்கள், காற்றில் கலந்து, உலகம் உள்ளவரை நிலைத்திருக்கும்.’
Readmore: குட்நியூஸ்!. ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை 5% ஆகக் குறைக்க வாய்ப்பு!. நோமுரா கணிப்பு!