சென்னையில் தனிக்குடித்தனம் நடத்தி வந்த நிலையில், கல்லூரி மாணவியை கொலை செய்துவிட்டு, காதலன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் உள்ள ராஜீவ் காந்தி நகரில் 19 வயதுக்கு உட்பட்ட இளம் ஜோடிகள், கடந்த 10 நாட்களுக்கு முன்பு, வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளனர். இவர்கள் தங்களை கணவன் – மனைவி எனக்கூறி மாதம் ரூ.4,000 வாடகையில் வீடு பார்த்து குடியேறியுள்ளனர். இந்நிலையில், நேற்று முன் தினம் காலை வரை அவர்களது வீட்டின் கதவு திறக்கப்படாததால், சந்தேகமடைந்த பக்கத்து வீட்டுக்காரர்கள், ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்துள்ளனர்.
அப்போது, வீட்டில் இளைஞர் தூக்கில் தொடங்கியபடி சடலமாக கிடந்துள்ளார். பின்னர், உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்த நிலையில், அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து வீட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது வாலிபர் தூக்கில் பிணமாக தொங்கிய நிலையிலும், இளம் பெண் கீழே பலத்த காயங்களுடனும் சடலமாக கிடந்தனர். இதையடுத்து, இருவரின் உடல்களையும் மீட்டு போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியானது. விசாரணையில், உயிரிழந்தது விழுப்புரம் அறிஞர் அண்ணா கல்லூரியில் 2ஆம் ஆண்டு படித்து வந்த ஆகாஷ் மற்றும் அபிநயா ஆகியோர் என தெரியவந்தது. இவர்கள் இருவரும் காதலித்து வந்துள்ளனர். பின்னர், ப்ராஜெக்ட் வேலைக்காக சென்னைக்கு செல்வதாக கூறிவிட்டு, இருவரும் வீட்டிலிருந்து வெளியேறியுள்ளனர்.
பின்னர், சென்னையில் வாடகைக்கு வீடு எடுத்து இருவரும் கணவன் – மனைவி போல் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். அதே நேரத்தில், கடந்த 10 நாட்களாக இருவருக்குள்ளும் தகராறும் ஏற்பட்டுள்ளது. சம்பவத்தன்றும் உல்லாசமாக இருந்த நிலையில், அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த ஆகாஷ், காதலி அபிநயாவை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில், அவர் இறந்துள்ளார். இதனால் பயந்து போன ஆகாஷும், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்தது.
இவர்கள் இருவருக்கும் என்ன பிரச்சனை என்பது தொடர்பாக நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் இருவரின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.