திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் விளாத்தி ஊரைச் சேர்ந்தவர் சிகாமணி. இவர் துபாயில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வரும் நிலையில், இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், சிகாமணிக்கு துபாயில் ஓட்டலில் வேலை பார்த்து வந்த கோவையை சேர்ந்த சாரதா என்ற பெண்ணுடன் கள்ளக்காதல் மலர்ந்துள்ளது. இதையடுத்து, சாரதாவிடம் சிகாமணி ரூ.6 லட்சம் வரை பணம் வாங்கியுள்ளார்.
மேலும், இதுதொடர்பாக இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் சாரதாவை சிகாமணி தாக்கியதால், கோபித்துக் கொண்டு சாரதா கோவைக்கு திரும்பினார். பின்னர், ஏப்ரல் 21ஆம் தேதி துபாயில் இருந்து வந்த சிகாமணி, சாரதாவை சந்தித்தார். அப்போது மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதனால், அவரை தீர்த்துக் கட்ட சாரதா முடிவு செய்தார்.
இதையடுத்து, சிகாமணியை சமாதானம் பேசுவதற்காக கோவைக்கு அழைத்துள்ளார் சாரதா. பின்னர், உறவினர்கள் மற்றும் கூலிப்படை உதவியுடன், இறைச்சியில் அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரையை கலந்து கொடுத்து சிகாமணியை கொலை செய்துள்ளார். பின்னர், அவரது உடலை கரூர் மாவட்டம் பரமத்தி பகுதியில் உள்ள காட்டுப்பகுதிக்குள் வீசியுள்ளனர். இச்சம்பவம் குறித்து பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
விசாரணையில், கள்ளக்காதலி சாரதா, தனது தாய் கோமதி, சகோதரி நிலா, உறவினர் சுவாதி, கூலிப்படையைச் சேர்ந்த புதியவன், தாயின் கள்ளக்காதல் தியாகராஜன் ஆகியோருடன் சேர்ந்து சிகாமணியை கொலை செய்துள்ளார். இதற்கிடையே, தியாகராஜன் கோவை நீதிமன்றத்தில் சரணடைந்தார். சாரதா உட்பட 5 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில், சாரதா உள்பட 6 பேரையும் நான்கு நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க கோவை 2-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் காவல்துறையினர் மனு தாக்கல் செய்த நிலையில், 6 பேரையும் மூன்று நாள் காவலில் விசாரிக்க நீதிபதி அனுமதியளித்தார். இதைத்தொடர்ந்து சாரதா உட்பட 6 பேரையும் போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர். இது குறித்து போலீசார் கூறுகையில், இந்த கொலையில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா..? சாரதாவை தாக்கியதற்காக இந்த கொலை நடந்ததா..? அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரையை எங்கு வாங்கினார்கள்..? என்பது குறித்து விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளனர்.
Read More : உங்கள் வீட்டில் பெண் குழந்தைகள் இருக்கா..? தமிழ்நாடு அரசின் ரூ.50,000 உதவித்தொகையை மிஸ் பண்ணிடாதீங்க..!!