உணவகங்களில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
* அனைத்து உணவு வணிகர்களும் https://foscos.fssai.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து, உணவு பாதுகாப்பு உரிமம் அல்லது பதிவுச் சான்றிதழ் பெற்றிருப்பது அவசியம்.
* உணவு வணிக நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு டைஃபாய்டு, மஞ்சள் காமலை உள்ளிட்ட நோய்களுக்கு எதிராக தடுப்பூசி போடப்பட்டிருக்க வேண்டும். இதற்கான மருத்துவ சான்றிதழையும் வைத்திருக்க வேண்டும்.
* எந்த வகை உணவு எண்ணெய்களையும் லேபிள் விவரங்களின்றியும், பொட்டலமிடாமல் சில்லறை அடிப்படையிலும் நுகர்வோருக்கு விற்பனை செய்யக்கூடாது.
* உணவகங்களில் பயன்படுத்தப்படும் தண்ணீரைப் பகுப்பாய்வு செய்து, பகுப்பாய்வறிக்கை வைத்திருக்க வேண்டும்.
* உணவுப் பொருள்களை ஈக்கள், பூச்சிகள் மொய்க்காத வண்ணம் கண்ணாடி பெட்டி அமைத்திருக்க வேண்டும்.
* உணவு எண்ணெய்யை ஒருமுறை மட்டுமே சமையலுக்கு பயன்படுத்த வேண்டும். மீதமான பயன்படுத்திய எண்ணெய்யை, அங்கீகரிக்கப்பட்ட கொள்முதலாளருக்கு மட்டும் விற்க வேண்டும்.
* விற்பனையாகாமல் மீதம் இருக்கும் உணவை வாடிக்கையாளர்களுக்கு விநியோகிக்கக் கூடாது.
* நியூஸ் பேப்பர் போன்ற அச்சிடப்பட்ட காகிதங்களில் உணவுப் பொருட்கள் நேரடியாகப் படும் வகையில் பரிமாறவோ/பொட்டலமிடவோ கூடாது.
* பிளாஸ்டிக்கில் உணவுப் பொருள்களை சூடாகவோ அல்லது இயல்பு நிலையிலோ பொட்டலமிடக் கூடாது.
* சிக்கன்-65,. பஜ்ஜி, கோபி-65 போன்ற உணவு வகைகளில் செயற்கை நிறமிகள் சேர்க்கக்கூடாது.
* உணவு பரிமாற வாழை இலை அல்லது அனுமதிக்கப்பட்ட பார்ச்மெண்ட் பேப்பர்/அலுமினியம் ஃபாயில் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
* உணவைக் கையாளுபவர்கள் கையுறை மற்றும் தலைமுடி கவசம் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும்.
* உணவு சமைக்க மற்றும் நொறுக்குத் தீனிகள் தயாரிக்க அயோடின் கலந்த உப்பு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
* உணவகங்கள், பேக்கரி, இனிப்பகங்கள் உள்ளிட்ட உணவு நிறுவனங்களில் அயோடின் கலக்காத உப்பு இருக்கவே கூடாது.
உணவு பாதுகாப்புத்துறையின் இந்த அனைத்து அறிவிப்புகளையும் உணவு வணிகர்கள் 14 நாட்களுக்குள் தவறாமல் பின்பற்ற வேண்டும். தவறும்பட்சத்தில் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி, உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அவ்வபோது, சோதனை நடத்தி அபராதம் விதித்து வரும் நிலையில், தற்போது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.