70 வருடங்களாக லிவ்-இன் உறவில் இருந்து சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட வயதான தம்பதி குறித்து தற்போது பார்க்கலாம்..
வாழ்க்கையின் அனைத்து ஏற்ற தாழ்வுகள், இன்ப துன்பங்களை தாண்டியும், என்றும் நிலைத்திருப்பவைதான் வலுவான உறவுகள் என்று கூறப்படுகிறது. சிறிய பிரச்சனைகள் அல்லது சண்டைகளுக்காக பிரேக் அப் செய்வது சகஜமாகிவிட்ட இந்த காலக்கட்டத்தில் நீண்ட கால வலுவான பிணைப்பு என்பது அரிதாக மாறிவிட்டது. எனினும், சில நிஜ வாழ்க்கைக் கதைகள், வலுவான உறவின் வலிமையை நமக்கு நினைவூட்டுகின்றன.
அந்த வகையில் ராஜஸ்தானின் துங்கர்பூர் மாவட்டத்தில் அமைந்திருக்கும் கலந்தர் கிராமத்தில் இதுபோன்ற ஒரு நீண்ட கால வலுவான உறவு வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 70 ஆண்டுகளாக லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வந்த வயதான ஜோடி சமீபத்தில் திருமணம் செய்து கொண்டனர்..
தற்போதைய காலக்கட்டத்தில் லிவ்-இன் உறவுகள் பிரபலமடைந்திருந்தாலும், பல பழங்குடி சமூகங்களில் அவை நீண்ட காலமாக அங்கீகரிக்கப்பட்ட நடைமுறையாக இருந்து வருகின்றன. துங்கர்பூர் மற்றும் பன்ஸ்வாரா மாவட்டங்களை உள்ளடக்கிய ராஜஸ்தானின் வாகட் பகுதியில், இத்தகைய உறவுகள் சமூக ரீதியாக ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. இந்த ஜோடியின் கதை அந்த நீடித்த கலாச்சார பாரம்பரியத்திற்கு ஒரு சான்றாகும்.
95 வயதான ராமா பாய் கராரி மற்றும் 90 வயதான ஜீவலி தேவி ஆகியோர் 70 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே வீட்டில் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர். இந்த ஜோடிக்கு 6 பிள்ளைகள் உள்ளனர். இவர்களின் நான்கு பேர் அரசாங்கப் பதவிகளில் வேலை செய்கிறார்கள்.
அவர்களின் மூத்த மகனுக்கு சுமார் 60 வயது, மேலும் இந்த ஜோடியின் அனைத்து குழந்தைகளுக்கும் குடும்பங்கள் உள்ளன. சமீபத்தில், இந்த வயதான தம்பதி முறையாக திருமணம் செய்து கொள்ள இதயப்பூர்வமான விருப்பத்தை வெளிப்படுத்தினர். தங்கள் பெற்றோரின் ஆசையை நிறைவேற்றும் வகையில், பிள்ளைகள் செவ்வாய்க்கிழமை அவர்களுக்கு ஒரு பிரமாண்டமான திருமணத்தை ஏற்பாடு செய்தனர். இந்த வயதான ஜோடியின் திருமணம் கிராமம் தழுவிய கொண்டாட்டமாக மாறியது.
திருமணத்திற்கு முந்தைய ஊர்வலம் இசை மற்றும் நடனத்துடன் உற்சாகமாக அரங்கேறியது. கிராமவாசிகள் மற்றும் தம்பதியினரின் குழந்தைகள் இதில் பங்கேற்றனர்.. திருமணத்தின் பாரம்பரிய சடங்காக, நெருப்பைச் சுற்றி ஏழு சுற்றுகள் தம்பதிகள் சுற்றி வந்ததை தொடர்ந்து, புதுமணத் தம்பதிகளின் நினைவாக ஒரு கூட்டு விருந்து நடைபெற்றது.
காதல், உண்மையானதாக இருக்கும்போது, வயதெல்லாம் ஒரு பெரிய விஷயம் இல்லை என்பதற்கு சான்றாக இந்த காதல் கதை உள்ளது. காதலை எந்த நேரத்திலும் முழு மரியாதையுடன் நிறைவேற்ற முடியும் என்ற ஆழமான செய்தியையும் இந்த திருமணம் வழங்குகிறது.
Read More : ஒரே நேரத்தில் ஒட்டு மொத்த ஊரும் விற்பனைக்கு வருது..!! இந்தியாவில் இப்படி ஒரு நிலமையா..? அய்யோ ஆண்டவா..