ஜெய்ப்பூர் அருகே உள்ள சாம்பார் நகரில் தண்ணீர் பஞ்சம் காரணமாக ஒட்டுமொத்த ஊரே விற்பனைக்கு வந்துள்ள அதிர்ச்சியான நிலைமை ஏற்பட்டுள்ளது.
ராஜஸ்தானில் உள்ள சாம்பார் நகரம், உப்பு உற்பத்தி மற்றும் பறவைகள் வரும் முக்கியமான பகுதியாக இருந்தது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து நிலவும் கடுமையான தண்ணீர் பற்றாக்குறை, தற்போது மக்கள் நகரம் விட்டு வெளியேறும் நிலைக்கு அவர்களைத் தள்ளியுள்ளது.
சமீபத்தில், சாம்பார் நகரில் உள்ள வார்டு 22 மற்றும் 23 பகுதிகளில், சுமார் 150 வீடுகள் விற்பனைக்கு வந்துள்ளன. இவை அனைத்தும் குடிநீர் பற்றாக்குறை என்ற ஒரே காரணத்தால் தான். இந்த வீட்டுக்காரர்கள் தங்களது வீடுகளின் சுவர்களில் “தண்ணீர் பஞ்சம் காரணமாக வீடு விற்பனைக்கு உள்ளது” என்ற போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்.
200 வருடங்களுக்கும் மேலான பழமை வாய்ந்த வீடுகளைக் கூட மக்கள் விட்டு வெளியேற தயாராக இருக்கிறார்கள் என்பது மிகுந்த தாக்கத்தை உணர்த்துகிறது. இதுகுறித்து அங்குள்ள பொதுமக்களில் ஒருவர் கூறுகையில், “கடந்த 7 ஆண்டுகளாக வீடுகளுக்கு குழாய் தண்ணீர் கூட வரவில்லை. இதனால், மக்கள் வாழ முடியாமல் வீடுகளை விற்றுவிட்டு வெளியேற முடிவு செய்துள்ளனர். அதிகாரிகள் எவரும் நடவடிக்கை எடுக்கவில்லை.” என்றார்.
முன்னதாக இங்கு 3,500 பேர் வசித்த நிலையில், தற்போது 1,700 பேர் மட்டுமே உள்ளனர். மீதமுள்ளவர்களும் விரைவில் நகரம் விட்டு செல்லவிருக்கின்றனர். இந்த செய்தி, இந்தியாவில் தண்ணீர் பற்றாக்குறை எந்த அளவிற்கு மோசமாக உள்ளது என்பதை மீண்டும் ஒருமுறை உணர்த்துகிறது. அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால், இது போன்ற நிலைகள் இன்னும் பல இடங்களில் ஏற்படக்கூடும் என்பதற்கான எச்சரிக்கை இது.