சென்னையில் டைபாய்டு காய்ச்சல் அதிகரித்து வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை டைபாய்டு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அதிகளவில் மருத்துவமனைக்கு வருவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
சென்னையில் பருவமழை தொடங்குவதற்கு முந்தைய இந்த காலக்கட்டத்தில் டெங்கு, சிக்குன் குனியா, வைரல் காய்ச்சல், பொதுவாக காணப்படும். தேங்கி நிற்கும் மழைநீரில் இருந்து கொசுக்கள் உற்பத்தியாகி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழகத்தில் பரவலாக டெங்கு பாதிப்பு இருந்தாலும் பயப்படக்கூடிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்று சுகாதாரத்துறை கூறியுள்ளது. தமிழகம் முழுவதும் சுகாதார தடுப்பு முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதால் கட்டுக்குள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் டைபாய்டு காய்ச்சல் சென்னையில் அதிகரித்து வருகிறது. பாக்டீரியா தொற்று மூலம் இது பரவுகிறது. குழந்தைகள், பெரியவர்கள் டைபாய்டு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அதிகளவில் மருத்துவமனைக்கு வருவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த சில நாட்களாக காய்ச்சலுடன் வாந்தி, வயிற்றுப்போக்கு அறிகுறியுடன் மருத்துவமனைக்கு பலர் வருகிறார்கள். டைபாய்டு வந்தால் அதிகபட்சமாக 104 டிகிரி வரை காய்ச்சல் தாக்கும். அசுத்தமான நீர் அல்லது உணவு மூலம் ஒருவர் இந்த டைபாய்டு பாக்டீரியா தொற்றை பெற வாய்ப்பு உள்ளது. மேலும் தலைவலி, வயிற்று வலி, உடல் வலி, தொடர்ந்து வயிற்றுப்போக்கு போன்றவை டைபாய்டு காய்ச்சலின் அறிகுறிகளாகும்.