கொங்கு மண்டலத்தில் முதியோர்களை குறிவைத்து கொலை செய்கிறார்கள் என்று பாஜக தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார்.
மதுரை மாவட்டம் ஒத்தக்கடை பகுதியில் பாஜக தென் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்றிருந்தார். இதில் பேசிய தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, “எந்த வேலையுமே செய்யாமல், கடந்த 4 ஆண்டுகளாக திமுக தனது ஆட்சியை ஓட்டி வருகிறது. தமிழ்நாட்டில் மக்கள் நிம்மதியாகவே இல்லை. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சார்கள் இங்கு உலவிக் கொண்டிருக்கின்றனர். மக்களின் பணத்தை கொள்ளையடித்து சினிமா தயாரிக்கக் கூடிய தம்பிகள் இங்கு உலவிக் கொண்டிருக்கும்போது, மக்கள் எப்படி நிம்மதியாக இருப்பார்கள்.
இதையெல்லாம் தாண்டி, நடுத்தர மக்கள் வெட்டுப்படாமல் வீட்டில் பாதுகாப்பாக இருக்க முடியுமா..? என்றால் அதுவும் முடியாது. கொங்கு மண்டலத்தில் முதியோர்களை குறிவைத்து கொலை செய்கிறார்கள். தென் பகுதிகளில் சாதிய வன்கொடுமையால் கொல்கிறார்கள். சென்னையில் கூலிப்படைகளை ஏவி கொலை செய்கிறார்கள். தமிழ்நாட்டில் எங்கு போனாலும் நிம்மதியே இல்லை.
2012இல் இந்தியாவில் 180 ரூபாய்க்கு கீழே வருமானம் பெறக்கூடியவர்கள் 16.2 சதவீதம் பேர் இருந்தனர். ஆனால், பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு 2023இல் இது வெறும் 2.3 சதவீதத்துக்கு கொண்டு வந்துள்ளோம். இது மிகப்பெரிய சாதனை. ஏப்ரல் 2025இல் கூட, உலகில் அதிவேகமாக வறுமையை ஒழித்த முதல் நாடாக இந்தியா இருக்கிறது என உலக வங்கி ஆய்வறிக்கை தெரிவித்திருக்கிறது. இது தான் மோடியின் சாதனை.
அடுத்தாண்டு (2026) தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும். திமுவை வீட்டிற்கு அனுப்ப வேண்டும். 2026ஆம் ஆண்டு நமது ஒற்றை இலக்கு, திமுகவை வீட்டுக்கு அனுப்ப வேண்டியது ஒன்றே ஒன்று தான். இதுதான் நம்முடைய இலக்கு” என்று தெரிவித்தார்.
Read More : நோட்..! திறனாய்வு தேர்வு உதவித்தொகைக்கான ஆன்லைன் பதிவில் புதிய மாற்றம்…!