கமல்ஹாசனின் “தக் லைஃப்” படம் ஓடும் திரையரங்குகளுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி கர்நாடக திரையரங்கு சங்கம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்த நிலையில், அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
மணிரத்னம் இயக்கத்தில் நடிகர்கள் கமல், சிம்பு, நடிகை திரிஷா உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த ஜூன் 5ஆம் தேதி வெளியாகி திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும் படம் தக் லைஃப். இப்படம் உலகம் முழுவதும் வெளியாகியிருந்தாலும், கர்நாடக மாநிலத்தில் மட்டும் வெளியாகவில்லை. இதற்கு காரணம் கமல்ஹாசன் தான்.
அதாவது, இசை வெளியீட்டு விழாவில் பேசிய அவர், கன்னட மொழி தமிழில் இருந்து பிறந்ததாக தெரிவித்திருந்தார். இது, பெரும் சர்ச்சையாக வெடித்தது. மேலும், கர்நாடகாவில் திரைப்படம் திரையிடுவதில் சிக்கல் ஏற்பட்டது. அதையும் மீறி கர்நாடகாவில் தக் லைஃப் திரைப்படம் வெளியானால், தியேட்டருக்கு தீவைப்போம் என சில கன்னட அமைப்புகள் பகிரங்கமாக எச்சரித்தனர்.
இந்நிலையில், கர்நாடக தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் தக் லைஃப் பட அச்சுறுத்தல்களில் இருந்து பாதுகாப்பு வழங்கக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர். இந்த மனு விசாரணைக்கு வந்த நிலையில், தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் வழக்கறிஞர் ஆஜரானார். அப்போது, சிலரால் நேரடியாக திரையரங்குகளுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருப்பதாகவும், படத்தை வெளியிட்டால், தியேட்டர்கள் கொளுத்தப்படும் என அச்சுறுத்தல் வந்திருப்பதாகவும் கூறினார்.
அதற்கு நீதிபதி, அப்படி என்றால், திரையரங்குகளில் தீயணைப்பு உபகரணங்களை நிறுவ வேண்டும் என்று கூறினார். மேலும் இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்திற்கு சென்று முறையிடுங்கள் எனக் கூறி மனுவை ஏற்க மறுத்தார். இருப்பினும், திரையரங்கு உரிமையாளர்கள் தியேட்டர்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என கேட்டபோது, மனுவை தள்ளுபடி செய்வதாக கூறி, வேண்டுமென்றால் கர்நாடகா உயர்நீதிமன்றத்தை நாடுங்கள் என நீதிபதி அறிவுறுத்தினார்.