கர்நாடக மாநிலம் பெலூர் தாலுகாவில் உள்ள கேரளூர் கிராமத்தில் சைத்ரா (33) என்ற பெண் தனது கணவர், குழந்தைகள் மற்றும் மாமியார், மாமனாரை கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, தனது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருக்கும் குடும்பத்தினரை, மொத்தமாக தீர்த்துக் கட்ட அவர்களுக்கு உணவில் ஸ்லோ பாய்சன் கலந்து கொடுத்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
சைத்ரா – கஜேந்திராவுக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆன நிலையில், இருவருக்கும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், சில மாதங்களாக சைத்ரா, பக்கத்து வீட்டில் வசிக்கும் ஷிவு என்பவருடன் கள்ளத்தொடர்பில் இருந்து வந்துள்ளார். இந்த உறவு தெரிய வந்தபோது, கணவர் அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த சைத்ரா, கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.
இந்நிலையில், கஜேந்திரா திடீரென நோய்வாய்ப்பட்ட நிலையில், மருத்துவர்கள் அவருக்கு உணவு விஷமாக மாறியதாக கூறியுள்ளனர். இதனால், சந்தேகமடைந்த கணவர், வீட்டை சோதனை செய்து பார்த்துள்ளார். அப்போது, மனைவியின் பையில் சந்தேகத்திற்கிடமான மாத்திரைகள் இருந்துள்ளது. இதை எடுத்துச் சென்று மருத்துவரிடம் காட்டியபோது, இது விஷ மாத்திரைகள் என்பதை உறுதி செய்தனர். இதையடுத்து, அவர் காவல்நிலையத்தில் புகாரளித்தார்.
விசாரணையில், சைத்ரா அந்த மாத்திரையை தினசரி உணவில் கலந்து கணவருக்கும், குழந்தைகள் மற்றும் மாமியார் – மாமனாருக்கும் கொடுத்து வந்தது தெரியவந்தது. இதனால் அனைவரும் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த விஷயத்தை உணர்ந்த கணவர் உடனடியாக மருத்துவமனையில் அனைவரையும் சேர்த்துள்ளார். இதற்கிடையே, பெலூர் போலீசார் சைத்ராவை கைது செய்ததுடன் கொலை முயற்சி வழக்கு, விஷம் கொடுத்தது மற்றும் மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சைத்ராவின் கள்ளக்காதலன் ஷிவுவின் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.