தமிழ்நாட்டில் மின் கட்டணத்தை உயர்த்த SEPC என்ற தனியார் மின் உற்பத்தி நிறுவனத்துடன் கைகோர்த்து செயல்படுகிறது என, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின்மீது தமிழ்நாடு மின்துறை பொறியாளர் அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.
தமிழ்நாடு மின்வாரியத்தின் கீழ் வீடுகள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் என 3 கோடிக்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் உள்ளன. இந்த இணைப்புகளுக்கு வழங்கப்படும் மின்சாரத்திற்கு தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் நிர்ணயிக்கும் கட்டணத்தை மின்வாரியம் வசூலித்து வருகிறது.
தமிழகத்தில் மின் கட்டணத்தை உயர்த்தும் அதிகாரம், மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் உள்ளது. 2022ல், மின் கட்டண உயர்வு தொடர்பான ஆணை வெளியிட்டபோது, அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு மின் கட்டணத்தை உயர்த்த அனுமதி அளிக்கப்பட்டது. அதன்படி, கடந்த மூன்று ஆண்டுகளாக மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. தற்போது, தமிழகத்தில் மின் கட்டணத்தை 3 சதவிகிதம் உயர்த்த மின் வாரியத்திற்கு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் பரிந்துரை செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு மின்துறை பொறியாளர் சங்கத் தலைவர் காந்தி, தூத்துக்குடியில் அமைந்துள்ள SEPC Power Limited மின் உற்பத்தி நிலையம் தொடர்பாக முக்கிய தகவலை வெளியிட்டார்.
525 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் இந்த தனியார் மின் நிலையம், ஆரம்பத்தில் ரூ.3,514 கோடி செலவில் ஒப்பந்தம் செய்து இருந்தது. ஆனால், திட்டம் தாமதமானதால், SEPC நிறுவனம் மேலும் ரூ.1,869 கோடி செலவாகியதாகவும், அந்த தொகையை தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையிடம் கோரியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதில் முக்கியமான தகவல் என்னவென்றால், ரூ.1,126 கோடி ரூபாயை நிறுவனமே செலவழிக்காத போதிலும், அதை மூலதனச் செலவாக கணக்கிட்டு பொதுமக்களிடம் மின் கட்டணமாக வசூலிக்கத் திட்டமிட்டுள்ளது என்பது அதிர்ச்சியளிக்கிறது. இந்த திட்டத்தினால், மக்களுக்கு ஆண்டுக்கு ரூ.11,000 கோடி வரை கூடுதல் மின் கட்டணம் சுமத்தப்பட வாய்ப்பு இருப்பதாக சங்க தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Read more: பள்ளி & கல்லூரி மாணவர்கள் அரசு விடுதியில் சேர விண்ணப்பிக்கலாம்…! சேலம் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!