ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி உள்ள நிலையில் இஸ்ரேலும் அமெரிக்காவும் பெரிய் விலையை செலுத்த வேண்டியிருக்கும் என்று ஈரான் எச்சரித்துள்ளது.
இன்று அதிகாலை ஈரானின் உள்ள அணுசக்தி உள்கட்டமைப்பு, பாலிஸ்டிக் ஏவுகணை தொழிற்சாலை போன்ற உயர் ரக இலக்குகளை குறித்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதனால் மத்திய கிழக்கு பகுதிகளில் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது. ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, ஈரானிய ஆயுதப்படைகளின் செய்தித் தொடர்பாளர் பிரிகேடியர் ஜெனரல் அபோல்பஸ்ல் ஷேகார்ச்சி, இஸ்ரேலும் அமெரிக்காவும் பெரியவிலையை கொடுக்க வேண்டியிருக்கும் என்று எச்சரித்தார்.
இதற்கிடையில், ஈரானின் உச்ச தலைவர் கமேனி, இஸ்ரேல் கடுமையான தண்டனையை அனுபவிக்கும் என்று எச்சரித்துள்ளார். ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் அதன் அணுசக்தி உள்கட்டமைப்பு, அதன் பாலிஸ்டிக் ஏவுகணை தொழிற்சாலைகள் மற்றும் அதன் பல இராணுவத் திறன்களை சேதப்படுத்தும் நோக்கில் உள்ளன என்று இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறினார். இதை ‘ஆபரேஷன் ரைசிங் லயன்’ என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதனிடையே, அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ, இஸ்ரேல் “ஈரானுக்கு எதிராக ஒருதலைப்பட்ச நடவடிக்கை” எடுத்ததாகவும், இஸ்ரேல் தனது தற்காப்புக்காக இந்தத் தாக்குதல்கள் அவசியம் என்று அமெரிக்காவிடம் கூறியதாகவும் கூறினார். இந்தத் தாக்குதல்களில் அமெரிக்கா ஈடுபடவில்லை என்றும், பிராந்தியத்தில் அமெரிக்கப் படைகளைப் பாதுகாப்பதே முதன்மையான முன்னுரிமை என்றும் அவர் விளக்கம் அளித்தார்.
ஈரானின் நடான்ஸில் உள்ள நாட்டின் முக்கிய யுரேனிய செறிவூட்டல் மையம் உட்பட பல இடங்களில் குண்டுவெடிப்பு ஏற்பட்டதாக அநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆனால், அதே நேரத்தில் தனது நடவடிக்கைக்கு பழிவாங்கும் வகையில் ஈரான் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தலாம் என்பதால் இஸ்ரேல் அவசரகால நிலையை அறிவித்தது.
இந்த தாக்குதலில் ஈரானிய அரசு தொலைக்காட்சி, புரட்சிகர காவல்படையின் உயரடுக்குத் தலைவரான ஹொசைன் சலாமி கொல்லப்பட்டதாகவும், தெஹ்ரானில் உள்ள அந்த பிரிவின் தலைமையகம் தாக்கப்பட்டதாகவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது. தலைநகரில் உள்ள ஒரு குடியிருப்புப் பகுதியில் நடந்த தாக்குதலில் பல குழந்தைகள் கொல்லப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
ஈரானின் அணுசக்தித் திட்டம் தொடர்பாக பதட்டங்கள் புதிய உச்சத்தை எட்டியுள்ள நிலையில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது. ஈரான் அணு ஆயுதத்தை உருவாக்க அனுமதிக்க மாட்டோம் என்று இஸ்ரேல் பல ஆண்டுகளாக எச்சரித்து வருகிறது. எனினும் இதனை பொருட்படுத்தாமல் ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்கி வருவதால் இஸ்ரேல் இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.