அன்புமணியை பார்த்தால் ரத்த அழுத்தம் ஏற்படுகிறது என்றும் எனக்கு கட்டளையிட இவர் யார் என்றும் ராமதாஸ் கேள்வி எழுப்பி உள்ளார்.
திண்டிவனம் அருகே தைலாபுரம் இல்லத்தில் பாமக நிறுவனர் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் “ என் மூச்சுக்காற்று அடங்கும் வரை தலைவர் பதவியை அன்புமணிக்கு வழங்க மாட்டேன்.. அன்புமணியின் செயல்பாடுகளை பார்க்கும் போது அவருக்கு தலைவர் பதவியை வழங்க முடியாது.. பாமக கட்சியை தொய்வில்லாமல் நடத்த ஆதரவு பெருகி உள்ளது. குடும்பத்தினர் அரசியலுக்கு வரக்கூடாது என கூறினேன்.. அதனை காப்பாற்ற முடியவில்லை..
கட்சியின் மூத்த தலைவர்கள் வலியுறுத்தியதால் தான் அன்புமணிக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. தினம் தினம் அன்புமணியிடம் பேசி சமாதானம் செய்து அமைச்சர் பதவியில் நீடிக்க வைத்தேன். அவர் மைக்கை தூக்கி அடிக்கிறார்.. பாட்டிலை கொண்டு தாயை அடிக்கிறார். அவருக்கு தலைமை பண்பு இல்லை. தனி ஒரு மனிதனாக 96,000 கிராமங்களுக்கு சென்று இரவு பகலாக கட்சிக்காக பாடுபட்டேன். செயல் தலைவராக செயல்படுவேன் என்று அன்புமணி கூறினால் என் மனது மகிழ்ச்சி அடையும். அன்புமணியை பார்த்தால் அதிர்ச்சி, மனக்குமுறல், ரத்த அழுத்தம் ஏற்படுகிறது.. எனக்கு கட்டளையிட இவர் யார்? இவருக்கு யார் அந்த அதிகாரம் கொடுத்தது” என்று தெரிவித்தார்.
பாமகவில் ராமதாஸ் – அன்புமணி ராமதாஸ் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. இருவரும் மாறி மாவட்ட நிர்வாகிகளை நியமிப்பது, நீக்குவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இது பாமகவினரிடையே குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
முன்னதாக நேற்று செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ் “ அன்புமணி உடனான சமரச பேச்சுவார்த்தை டிராவில் முடிந்தது.. குலசாமி என்று கூறிக்கொண்டே என் நெஞ்சில் குத்துகிறார்கள். அன்புமணி என்னை நடை பிணமாக்கி நாடு முழுவதும் என் பெயரில் நடைபயணம் செய்ய உள்ளனர்.. 7 ஆண்டுகளுக்கு முன்பே கட்சியை கைப்பற்றும் எண்ணம் அன்புமணிக்கு இருந்தது. ஒவ்வொரு செங்கலாக கட்டிய பாமக மாளிகையில் நான் குடியமர்த்தியவரே என்னை வெளியே தள்ளுகிறார்.
என்னை தொலைபேசியில் அழைத்து பேசி மானபங்கம் செய்துவிட்டார்கள்.. பாமகவை விட்டே என்னை நீக்க நினைக்கிறார்கள். என் கண்விரலைக் கொண்டே என் கண்ணை நான் குத்திக்கொண்டேன்.. உயிருள்ள என்னை உதாசீனப்படுத்திவிட்டு, உருவப்படத்திற்கு உற்சவம் செய்கின்றனர்..” என்று கூறியிருந்தார்.
நேற்று பேசிய அவர் 2026 தேர்தல் வரை நான் தான் பாமக தலைவராக இருப்பேன் என்று கூறியிருந்தார். ஆனால் இன்று மூச்சுக்காற்று இருக்கும் வரை நான் தான் தலைவர் என்று கூறியுள்ளதால் அன்புமணி உடனான சமாதான பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை என்பது தெளிவாகிறது. இதனால் பாமகவில் உட்கட்சி பூசல் உச்சத்தை எட்டி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Read More : தயவுசெய்து இளைய காமராஜர் என்று அழைக்க வேண்டாம்.. தவெக விழாவில் விஜய் வேண்டுகோள்..