ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தக்கூடும் என்ற ட்ரம்பின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் போர் தொடங்கிவிட்டது என்று ஈரானின் உச்ச தலைவர் அறிவித்துள்ளார்.
ஈரான் – இஸ்ரேல் இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், போர் தொடங்கிவிட்டதாக ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். அவரின் பதிவில் “போர் தொடங்குகிறது. அலி தனது சுல்பிகருடன் கைபருக்குத் திரும்புகிறார்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இஸ்ரேல்-ஈரான் மோதலின் போது ஈரானின் உச்ச தலைவர் கமேனி எங்கு மறைந்திருக்கிறார் என்பது அமெரிக்காவிற்குத் தெரியும், ஆனால் அவர் இப்போதைக்கு கொல்லப்படுவதை விரும்பவில்லை என்று நேற்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கூறிய சில மணி நேரங்களுக்குப் பிறகு கமேனியின் இந்த பதிவு வந்துள்ளது.
இஸ்ரேல் – ஈரான் மோதல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், ஈரான் எந்த நிபந்தனையும் இன்றி சரணடைய வேண்டும் என்று டிரம்ப் ஒரு சமூக ஊடக பதிவில் வலியுறுத்தினார். மேலும் அவரின் பதிவில் “ “உச்ச தலைவர் என்று அழைக்கப்படுபவர் எங்கே மறைந்திருக்கிறார் என்பது எங்களுக்குத் தெரியும்.
“அவர் ஒரு எளிதான இலக்கு, ஆனால் அங்கு பாதுகாப்பாக இருக்கிறார் – நாங்கள் அவரை வெளியே எடுக்கப் போவதில்லை (கொல்லப் போவதில்லை!), குறைந்தபட்சம் இப்போதைக்கு அல்ல. ஆனால் பொதுமக்கள் அல்லது அமெரிக்க வீரர்கள் மீது ஏவுகணைகள் வீசப்படுவதை நாங்கள் விரும்பவில்லை. எங்கள் பொறுமை குறைந்து வருகிறது.” என்று குறிப்பிட்டுள்ளார்.. இதன் மூலம் ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தக்கூடும் என்று ட்ரம்ப் அச்சுறுத்தி உள்ளார்.
ட்ரம்ப் தனது சமூக ஊடகப் பதிவிற்கு முன், சர்வதேச உச்சிமாநாட்டில் பங்கேற்பதை நிறுத்திவிட்டு, தனது தேசிய பாதுகாப்புக் குழுவுடன் அவசர பேச்சுவார்த்தைகளுக்காக வாஷிங்டனுக்கு திரும்பினார்., தெஹ்ரானின் 9.5 மில்லியன் மக்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேற வேண்டும் என்றும் டிரம்ப் வலியுறுத்தினார்.