இன்றைய உலகில் ஓடிடி தளங்கள் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. குறிப்பாக, திரைப்படங்கள் வெளியாகி ஒரு சில நாட்களிலேயே ஓடிடி தளங்களில் ஹெச்டி தரத்துடன் படம் வெளிவருவதால், அதிக செலவின்றி படம் பார்க்க நினைக்கும் ரசிகர்கள் இதனைப் பயன்படுத்தி கொள்கின்றனர். அதுமட்டுமின்றி, ஓடிடியில் வெளிவரக்கூடிய சீரிஸ் மற்றும் பல நிகழ்ச்சிகள் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் உள்ளன. ஆனால், சந்தா பணம் கட்டினால் மட்டுமே பெரும்பாலான நிகழ்ச்சிகளை பார்க்க முடியும் என்ற நிலையில், பணம் கட்டி ஒருவர் பெற்ற பயனர் ஐடி மற்றும் பாஸ்வேர்ட் ஆகியவற்றை மற்றவர்கள் பகிர்ந்து கொள்கின்றனர்.
உதாரணமாக, வீட்டில் அல்லது நண்பர்கள் குழுவில் யாரேனும் ஒருவர் ஓடிடி-க்கு சந்தா கட்டியிருந்தால், அவரைச் சார்ந்த மற்றவர்கள் அவரிடம் இருந்து பாஸ்வேர்ட் பெற்று இலவசமாகவே திரைப்படங்கள், நிகழ்ச்சிகளை பார்த்து வருகின்றனர். இதனால், தங்களுக்கு கிடைக்க வேண்டிய வருமானம் குறைகிறது என்ற நிலையில், பல ஓடிடி நிறுவனங்கள் கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளன. அதன்படி, பயனரை ஐடி மற்றும் பாஸ்வேர்ட் குறிப்பிட்டு நாம் லாகின் செய்யும் ஸ்மார்ட்போன் விவரங்களை அது பதிவு செய்து கொள்ளும். இதுபோல எத்தனை பயனர்கள் அனுமதிக்கலாம் என்பது வரை ஓடிடி நிறுவனங்கள் முடிவு செய்கின்றன.
இந்நிலையில், நெட்பிளிக்ஸ் நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாக மேற்கொண்ட நடவடிக்கைகளின் விளைவாக பாஸ்வோர்ட் ஷேரிங் நடவடிக்கை மாபெரும் அளவில் கட்டுப்படுத்தப்பட்டது. இதனால், அந்த நிறுவனத்தின் வருமானமும் அதிகரித்திருப்பதாக கூறப்படுகிறது. அதேசமயம், டிஸ்னி பிளஸ் நிறுவனத்திற்கு தொடர்ந்து சந்தா வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறைந்து வருகின்றன. பாஸ்வேர்டு ஷேரிங் அடிப்படையில் பயனாளர்கள் தங்கள் தளத்தை பயன்படுத்தி கொள்வதாலேயே இதுபோன்ற இழப்பு ஏற்படுவதாக அந்த நிறுவனம் கூறியுள்ளது.
குறிப்பாக, டிஸ்னி பிளஸ் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி பாப் ஐகர், இந்த விவகாரத்தில் மிக தீவிரமான நிலைப்பாட்டை கொண்டுள்ளார். அவரது முயற்சியால், பாஸ்வோர்ட் ஷேரிங் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த டிஸ்னி பிளஸ் முடிவு செய்துள்ளது. வருமானத்தை அதிகரிக்க திட்டமிட்டுள்ள நிலையில், பாஸ்வோர்ட் ஷேரிங் நடவடிக்கையை தடுக்க முடிவு செய்துள்ளதாகவும் பாப் ஐகர் கூறினார். அடுத்த ஆண்டு முதல் இந்த நடவடிக்கையை செயல்படுத்த இருப்பதாகவும், புதிதாக ஷேரிங் அக்கவுண்ட் என்ற சந்தா முறையை அறிமுகம் செய்யவிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.