திமுக தீவிரவாத அச்சுறுத்தல்களை குறைத்து மதிப்பிடுகிறது என்று அண்ணாமலை குற்றம்சாட்டி உள்ளார்.
கோவையில் கடந்த 2022-ம் ஆண்டு நடந்த கார் குண்டு வெடிப்பு சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை மேற்கொண்டு 14 பேரை கைது செய்தது. மேலும் இந்த விசாரணையில், கோவை அரபிக் கல்லூரி முதல்வர் அகமது அலி, மாணவர்களை மூளை சலவை செய்து ஐஎஸ்ஐஎஸ் அமைப்பிற்கு அனுப்ப முயன்றது தெரிய வந்தது. இது தொடர்பாக தனியாக வழக்குப் பதிவு செய்த என்.ஐ.ஏ அதிகாரிகள் அகமது அலி, ஜவகர் சாதிக் உள்ளிட்ட 4 பேரை நேற்று கைது செய்தனர்.
தீவிரவாத அமைப்புக்கு ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வகுப்பறைகள் மற்றும் சமூக தளத்தைப் பயன்படுத்தி வந்தவர்கள் கிலாபத் சித்தாந்தத்தையும் தியாகத்தையும் ஜிஹாத் மூலம் ஊக்குவித்ததாகவும் என்.ஐ.ஏ விசாரணையில் தெரிய வந்துள்ளது.
தேசத்திற்கு எதிரான தீவிரவாத நடவடிக்கைகளைத் தடுக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, பயங்கரவாத அமைப்புக்கு ஆட்சேர்ப்பது வழக்கில் என்.ஐ.ஏ தனது விசாரணையை தொடர்ந்து வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக பயங்கரவாத அமைப்புக்கு ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வகுப்பறைகள் மற்றும் சமூக தளத்தைப் பயன்படுத்தி வந்த ஜமீல் பாஷா மற்றும் அவரது கூட்டாளிகளான இர்ஷாத், சையத் அப்துர் ரஹ்மான் மற்றும் முகமது ஹுசைன் ஆகியோரை என்.ஐ.ஏ கைது செய்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது..
இந்த நிலையில் தமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரின் பதிவில் “வெறும் ஒரு சிலிண்டர் வெடிப்பு” என்று அவர்கள் கூறினர். இது திமுக அரசாங்கத்தின் கீழ் இயங்கும் ஐஎஸ்ஐஎஸ்-தொடர்புடைய தீவிரமயமாக்கல் மற்றும் ஆட்சேர்ப்பு வலையமைப்பாகும், வகுப்பறைகளை பயங்கரவாத தொழிற்சாலைகளாகப் பயன்படுத்துகிறது. நேற்று மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டனர், மொத்தம் 8 பேர், அனைவரும் அக்டோபர் 2022 இல் கோவையில் நடந்த தற்கொலை குண்டுவெடிப்புடன் தொடர்புடையவர்கள்.
இந்த பயங்கரவாதக் குழுக்களை அகற்ற NIA அயராது உழைத்து வரும் நிலையில், திமுக தொடர்ந்து தீவிரவாத அச்சுறுத்தல்களை குறைத்து மதிப்பிடுகிறது, தற்கொலை குண்டுவெடிப்பு சம்பவங்களை வெறும் விபத்துக்கள் என்று புறக்கணிக்கிறது. பொறுப்புணர்வு இல்லாத போது, தேசிய பாதுகாப்பு அதற்கு விலை கொடுக்கிறது. தமிழ்நாட்டிற்கு இதை விட சிறந்த ஆட்சி கிடைத்திருக்க வேண்டும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
Read More : மீண்டும் தெறித்த புல்லட்.. தப்பியோடிய பிரபல ரவுடியை சுட்டுப்பிடித்த போலீஸ்..!! கதி கலங்கும் கிரிமினல்ஸ்