சென்னையில் பள்ளிகள் அமைந்துள்ள பகுதிகளில் கனரக வாகனங்களுக்கு நேரக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் சென்னையின் கொளத்தூர் பகுதியில், தாயுடன் இரு சக்கர வாகனத்தில் பள்ளி சென்ற மாணவி தவறி விழுந்து பின்னால் வந்த தண்ணீர் லாரி மோதியதில் மாணவி சம்பவ இடத்தில் உயிரிழந்தார். இந்த சம்பவம் சென்னை முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக இரண்டு போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இந்த விபத்தின் எதிரொலியாக சென்னை காவல்துறை சில நடவடிக்கைகளை எடுத்துள்ளது. சென்னையில் பள்ளிகள் அமைந்துள்ள பகுதிகளில் கனரக வாகனங்களுக்கு நேரக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை சென்னை காவல் ஆணையர் வெளியிட்டுள்ளார். மேலும் பள்ளி மாணவர்கள் வரும் நேரங்களில் கனரக வாகனங்கள் செல்ல அனுமதி வழங்கக் கூடாது என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
பள்ளி தொடங்கும், முடியும் நேரங்களில் போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் போக்குவரத்து காவலர்கள் இருக்க வேண்டும் என்று அவர் அறிவுறுத்தி உள்ளார். அதன்படி காலை 8 முதல் 12 மணி வரையும், மாலை 3 மணி முதல் 7 மணி வரை கனரக வாகனங்களுக்கு அனுமதி இல்லை. இதனை போக்குவரத்து போலீசார் உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் அறிவித்துள்ளார். மேலும் விபத்தை ஏற்படுத்தும் கனரக வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களையும் 100 நாட்களுக்கு திரும்ப தரக்கூடாது எனவும் வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
Read More : ஏடிஜிபி ஜெயராமன் இடைநீக்கத்தை வாபஸ் பெற முடியாது.. உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு திட்டவட்டம்..