உலகில் ஒவ்வொரு நிமிடமும் சராசரியாக 20 பேர் தங்கள் நாட்டில் வசிக்க முடியாமல் அகதிகளாக வேறு நாட்டில் தஞ்சமடைய செல்கின்றனர். அகதிகள் என்றால், போரினாலோ அல்லது வறுமையினாலோ தனது சொந்த நாட்டை விட்டு வேறு நாட்டிற்கு சென்று தஞ்சம் புகுபவர்களை தான் அகதிகள் என்று கூறுகிறோம். 2000-ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் சிறப்புத் தீர்மானம் ஒன்றின்படி அகதிகளுக்கான ஆதரவினை வெளிப்படுத்தும் விதமாக உலக அகதிகள் தினம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதன்படி உலக அகதிகள் தினம் முதன்முதலில் ஜூன் 20, 2001 அன்று 1951 அகதிகள் மாநாட்டின் 50-வது ஆண்டு மாநாட்டின் போது கொண்டாடப்பட்டது.
இந்தநிலையில் இன்று (ஜூன் 20) உலக அகதிகள் தினம் அனுசரிக்கப்படுகிறது. சொந்த நாட்டைவிட்டு, இருக்கும் சிறிய சேமிப்பையும் இருப்பிடத்தையும் விட்டு ஒருவர் வேறு நாட்டிற்குப் பயணிக்கிறார் என்றால் அவரின் கையறுநிலையை நாம் உணர்ந்துகொள்ளவேண்டும். உயிர் பிழைத்தால் போதும் என்பதைத் தாண்டி அந்தப் பயணத்தின் லட்சியம் வேறொன்றும் இல்லை.
அந்தவகையில் சிரியா உள்நாட்டுப் போரிலிருந்து தப்பிக்க ஐரோப்பாவில் தஞ்சமடைய ரப்பர் படகு ஒன்றில் சிறு கூட்டம் பயணிக்கிறது. படகு விபத்திற்குள்ளாகி எல்லோரும் கடலில் சிதறுகின்றனர். அந்த விபத்தில் சிக்கிய சிவப்பு நிறச் சட்டை அணிந்த மூன்று வயதுக் குழந்தை ஆலன் குர்தியை கடல் அலை 2015 செப்டம்பர் 2 ஆம் தேதி கரையில் ஒதுக்கியது. கவிழ்ந்த நிலையில் அலையின் மடியில், அதன் தாலாட்டில் மயங்கித் தூங்குவது போல் அமைதியாக இறந்து கிடந்தான் ஆலன். இப்போது அந்தப் புகைப்படத்தைப் பார்த்தாலும் நாம் கலங்கிவிடுவோம்.
இந்த ஒரு புகைப்படமே அகதிகள் குறித்த துன்பத்தின் கொடூரமான சாட்சி எனலாம். கரோனாவால் எவ்வித அவகாசமும் இல்லாமல் திடீரென்று ஊரடங்கு அறிவிக்கப்பட்டவுடன் புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த நாட்டிலேயே அகதிகள் போல் எல்லாச் சாலைகளிலும் மூட்டை முடிச்சுகளுடன் குழந்தைகளைச் சுமந்துகொண்டு சென்றதைக் கண்ணீரோடு நாமும் பார்த்தோம். இதைவிட மிகக் கொடியதாகவே நாடு கடந்து, வாழ்வுக்காகப் பயணிக்கும் அகதிகளின் பயணம் உள்ளது. உள்நாட்டுப் போர்களும், கலவரங்களும், எல்லைக்காக நடக்கும் போர்களும், வறுமையும் இப்படியான அகதிகளை உருவாக்குகிறது.
உலகளவில் அகதிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஐ.நாவின் கூற்றுப்படி, தற்போது சுமார் 120 மில்லியன் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி வெளிநாட்டில் அகதிகளாக உள்ளனர். இது 2ம் உலகப்போருக்கு பிறகு மிகப்பெரிய இடம்பெயர்வுக்கான நெருக்கடியை குறிக்கிறது. சிரியா, உக்ரைன், ஆப்கானிஸ்தான், தெற்கு சூடான், மியான்மர் போன்ற நாடுகளில் தொடரும் மோதல்கள் மற்றும் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பேரழிவுகள் இந்த முக்கிய இடம்பெயர்வுக்கு காரணமாகின்றன.
2025ம் ஆண்டு கருப்பொருள்: இந்தாண்டுக்கான கருப்பொருள் “நம்பிக்கையான வீடு”. அதாவது, அகதிகளுக்கு பாதுகாப்பான ஒரு புகலிடத்தை வழங்குவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது.நம்பிக்கையான வீடு என்பது வெறும் உடல் ரீதியான தங்குமிடத்தை மட்டும் குறிக்கவில்லை. மாறாக, துன்புறுத்தலில் இருந்து பாதுகாப்பு, சட்டப் பாதுகாப்பை வழங்குதல், அகதிகள் தங்கள் தாய் நாட்டிற்கு திரும்புவதற்கான சூழலை உருவாக்குதல், அல்லது புதிய நாட்டில் ஒருங்கிணைந்து வாழ்வதற்கான, வாய்ப்புகள் வழங்குகள், அகதிகளை புதிய சமூகங்களில் ஏற்றுக்கொண்டு அவர்களுக்கு கல்வி, வேலை, சுகாதாரம் போன்ற அத்தியாவசிய தேவைகளுக்கான அணுகலை வழங்குதல் மூலம் அவர்கள் கண்ணியத்துடனும், மரியாதையுடனும் வாழமுடியும்.