நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த வாரம் வெளியான திரைப்படம் தான் ஜெயிலர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ள நிலையில், மோகன்லால், சிவராஜ்குமார், சுனில், ரம்யா கிருஷ்ணன், ரெடின் கிங்ஸ்லி, வசந்த் ரவி, மிர்னா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருக்கின்றனர். இப்படம் வசூலில் பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களை பின்னுக்கு தள்ளி வருகிறது.
இந்நிலையில், ரஜினிகாந்த் தனது படங்களின் ரிலீசுக்கு முன்னர், இமயமலை செல்வதை வழக்கமாக வைத்திருந்தார். இதற்கிடையே, கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அண்ணாத்த படத்தின் போது அவரால் இமயமலை செல்ல முடியவில்லை. இந்நிலையில், சுமார் 4 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது மீண்டும் இமயமலைக்கு சென்றிருந்தார் ரஜினி. அங்கு ரிஷிகேஷில் உள்ள தயானந்த சரஸ்வதி ஆசிரமத்திற்கு சென்று துறவிகளை சந்தித்தார்.
இதனைத் தொடர்ந்து பத்ரிநாத் கோவிலுக்கு சென்று வழிப்பட்டு பாபாஜி குகையில் தியானத்தில் ஈடுப்பட்டார். இதையடுத்து, கடந்த 17ஆம் தேதி ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனை நேரில் சந்தித்தார். தொடர்ந்து ராஞ்சியில் உள்ள யோகதா சத்சங்க ஆசிரம தலைமையகத்துக்கு சென்று, அங்குள்ள துறவிகளை சந்தித்தார். இந்நிலையில், உத்தரப்பிரதேச ஆளுநர் ஆனந்தி பென்னை ரஜினி மரியாதை நிமித்தமாக இன்று சந்தித்தார். இதையடுத்து, அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்துடன் ரஜினிகாந்த் இன்று மாலை ஜெயிலர் படம் பார்க்க இருக்கிறார்.