சந்திரயான் 2 ஆர்பிட்டர் மற்றும் சந்திரயான் 3 லேண்டர் இடையே தொலைதொடர்பு இணைப்பு வெற்றிகரமாக உருவாக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக சந்திரயான் – 2 விண்கலம், கடந்த 2019ஆம் ஆண்டு ஜூலை மாதம் 22ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது 48 நாட்கள் பயணத்துக்குப் பின் நவம்பர் 7ஆம் தேதி நிலவின் தென் துருவத்தில் இறங்க முடிவு செய்யப்பட்டது. எனினும் திடீரென விக்ரம் லேண்டர் கருவியின் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. மீண்டும் அந்தக் கருவியைத் தொடர்புகொள்ள இஸ்ரோ பலமுறை முயற்சித்தது. ஆனால், அது சாத்தியமாகவில்லை.
தரையிறங்கும்போது லேண்டரில் இருந்த 5 இன்ஜின்கள் உருவாக்கிய அதீத உந்து திறன், பிழைகளைக் கண்டறிவதில் மென் பொருளுக்கு இருந்த கட்டுப்பாடுகள், சிறிய அளவிலான தரையிறங்கும் பகுதி ஆகிய காரணங்களால், லேண்டரும் உள்ளே இருந்த ரோவரும் வெடித்துச் சிதறின. ஆர்பிட்டர் மட்டும் இன்னும் இயங்கி வருகிறது. தற்போது இந்த ஆர்பிட்டருடன், சந்திரயான் 3 லேண்டர் விக்ரம் இருவழித் தொலைத்தொடர்பை வெற்றிகரமாக ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக இஸ்ரோ வெளியிட்டுள்ள பதிவில், ’’இருவழி தொலைத்தொடர்பு மூலம் பெங்களூருவில் உள்ள தரைக் கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து சந்திரயான் – 3 லேண்டரைத் தொடர்புகொள்ள முடியும்’’ என்று தெரிவித்துள்ளது. இதன்மூலம் விக்ரம் லேண்டருக்கு தகவல்களை அனுப்பவும், பெறவும் முடியும். அதேபோல, ’’லேண்டர் நிலவின் தென் துருவத்தில் தரையிறங்க உள்ள நிகழ்வு, ஆகஸ்ட் 23ஆம் தேதி மாலை 5.20 மணியில் இருந்து நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படும்’’ என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க: சந்திரயான் 3: லேண்டர் எடுத்த நிலவின் புதிய புகைப்படங்கள்…! புதன்கிழமைக்காக தாயாருகும் இஸ்ரோ…