சிவபெருமானுக்கு வழக்கமாக வில்வ இலை மட்டுமே அர்ப்பணிக்கப்படுகிறது என்பது பெரும்பான்மையோர் அறிந்த உண்மை. ஆனால், தமிழகத்தில் ஒன்றே ஒரு கோயிலில் மட்டுமே துளசி இலைகளால் சிவபெருமானுக்கு பூஜை செய்யும் மரபு தொடர்ந்து வருகிறது என்பதை பலர் அறிய வாய்ப்பில்லை.
சென்னை – வல்லக்கோட்டை பாதையில் உள்ள கொளத்தூர் கிராமத்தில் அமைந்துள்ள வில்வவன நாயகி சமேத துளசீஸ்வரர் கோயில் இந்த மரபின் பிரத்தியேக சாட்சி ஆகும். இங்கு துளசீஸ்வரர் என்ற திருநாமத்தில் சிவபெருமானுக்கு துளசி மற்றும் கொன்றை மலர்களால் பூஜை செய்யப்படுகிறது.
இந்த கோயிலில் இருந்த சிவலிங்கத்தை மஹாரிஷி அகத்தியர் பிரதிஷ்டை செய்ததாக புராணங்கள் கூறுகின்றன. கைலாயத்தில் நடைபெற்ற சிவ – பார்வதி திருமண நிகழ்வை காண தேவர்கள் வடக்கு பகுதியில் திரண்டதால் பூமியின் சமநிலை பாதிக்கப்பட, அதனை சரிசெய்ய அகத்தியரைக் தெற்கே அனுப்பிய சிவபெருமான், அவரால் 108 சிவலிங்கங்கள் நிறுவப்பட்டதாக இந்த கதை கூறுகிறது.
அவற்றுள் ஒன்றான இத்தலத்தில், அகத்தியர் துளசியால் பூஜை செய்த நாள் புரட்டாசி பௌர்ணமி. அவரின் அர்ப்பணிப்பால் மகிழ்ந்த சிவபெருமான், அர்த்தநாரீஸ்வர வடிவத்தில் காட்சி அளித்ததாகவும், இன்று வரை அதே வடிவில் லிங்கமாக நிலை கொண்டிருப்பதாகவும் அறியப்படுகிறது.
900 ஆண்டுகளுக்கும் மேல் பழமையானதாக கூறப்படும் இந்த கோயில், விக்ரம சோழன் காலத்தில் கட்டப்பட்டதாக வரலாற்றுச் சான்றுகள் தெரிவிக்கின்றன. இங்கு சிவலிங்கம் சுமார் 5 அடி உயரம், சதுர வடிவ ஆவுடையாருடன் அமைந்துள்ளது. சிறப்பு விவரம் என்னவெனில், லிங்கம் கிழக்கே முகம் வைத்து இருந்தாலும், சற்று ஈசானியம் நோக்கி திரும்பி இருக்கிறது.
இன்று “கொளத்தூர்” என அழைக்கப்படும் இந்த கிராமத்தின் தொன்மையான பெயர் செம்பியன் கொளத்தூர். ‘செம்பியன்’ என்பது சோழ மன்னர்களுக்குரிய சிறப்புப் பட்டமாகும். இந்த ஊரில் அமுதவல்லி தாயார் சமேத திருநாராயண பெருமாள் கோயிலும் பக்தர்கள் பலர் பார்வையிடும் முக்கிய ஸ்தலமாக இருக்கிறது.
Read more: வாஸ்துபடி இந்த 5 இடங்களில் இருந்து சாப்பிடுவது நல்லதல்ல.. ஏன் தெரியுமா?