தேமுதிக தலைவர் விஜயகாந்தால் முன்பு போல சுறுசுறுப்பாக செயல்பட முடியவில்லை. உடல்நலக் குறைவு காரணமாக வெளிநாடுகளுக்கு சென்று பல்வேறு சிகிச்சைகளை எடுத்துக் கொண்டார். ஏராளமான மருந்து, மாத்திரைகள், அறுவை சிகிச்சைகள் உள்ளிட்டவற்றால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார். தற்போது நடப்பதற்கே மிகவும் சிரமப்பட்டு வரும் நிலையில், இருக்கையில் அமர்ந்த படியே இருக்கிறார்.
இந்நிலையில், விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”கடந்த 02005ஆம் ஆண்டு கழகம் தொடங்கப்பட்ட பிறகு 2006ஆம் ஆண்டு ஒவ்வொரு ஆண்டும் எனது பிறந்தநாளை “வறுமை ஒழிப்பு நாளாக” கடைபிடித்து வருகிறேன். தேமுதிக நிர்வாகிகளும், தொண்டர்களும் என் வழியைப் பின்பற்றி முடிந்த அளவிற்கு மக்களுக்கான நல உதவிகளை “இயன்றதைச் செய்வோம், இல்லாதவர்க்கே” என்ற கொள்கை முழக்கத்தோடு தொடர்ந்து, ஒவ்வொரு ஆண்டும் செய்து வருகிறார்கள்.
என் மீது அன்புகொண்ட தமிழக மக்களுக்கும், என் தாய்மார்களுக்கும், தேமுதிக நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் என்றென்றும் நான் கடமைப்பட்டுள்ளேன். அதே நேரத்தில் மக்கள் தங்கள் நல்ஆதரவையும், ஒத்துழைப்பையும் வரும் மக்களவைத் தேர்தலில் தொடர்ந்து வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
என்னுடைய உடல்நலம் குறித்த வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். நான் நலமுடன் இருக்கிறேன். சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சி தலைமை கழகத்தில் எனது பிறந்தநாளை முன்னிட்டு (ஆகஸ்ட் 25) காலை 10 மணிக்கு நிர்வாகிகளையும், தொண்டர்களையும் நேரில் சந்திக்கவுள்ளேன். என்னை சந்திக்க வரும் தொண்டர்கள் யாரும் பொக்கே, சால்வை, மாலை போன்ற அன்பளிப்புகளை வாங்கி வர வேண்டாம்” என கேட்டுக்கொண்டுள்ளார்.