அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வு பெறும் வயதில் மத்திய அரசு அவ்வப்போது பல்வேறு திருத்தங்களை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், மீண்டும் பொதுத்துறை வங்கிகளின் தலைவர்கள் மற்றும் நிர்வாக இயக்குநர்களின் ஓய்வு வயதை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதாவது, பாரத ஸ்டேட் வங்கியின் தலைவர் தினேஷ் காராவுக்கு பதவி நீட்டிப்பு கிடைக்க வாய்ப்புள்ளதாகவும், அவரது ஓய்வு பெறும் வயது நீட்டிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. மேலும், பொதுத்துறை வங்கிகள் மற்றும் LIC தலைவர்களின் ஓய்வு வயதை அதிகரிக்கவும் பரிசீலிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுதொடர்பாக மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், ”தற்போது பொதுத்துறை வங்கி நிர்வாக இயக்குனர்களின் ஓய்வு பெறும் வயது 60ஆக உள்ள நிலையில், அதை 62ஆக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். எஸ்பிஐ வங்கியின் தலைவர் தினேஷ் காரா 2020 அக்டோபர் மாதத்தில் பொறுப்பேற்றார். தற்போது உள்ள விதிகளின்படி, அவர் 63 வயது வரை பதவியில் இருக்க முடியும்.
பொதுத்துறை வங்கிகளின் நிர்வாக இயக்குநர்களின் ஓய்வு வயதை 60இல் இருந்து 62ஆக உயர்த்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. ஆனால், இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. எல்ஐசி தலைவரின் தற்போதைய ஓய்வு வயது 62 ஆகும். மத்திய அரசு ஊழியர்களில் பலருக்கும் ஓய்வு பெறும் வயது சமீபத்தில் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.