தொழிற்கல்விக்கு மூடு விழா நடத்தும் பள்ளிக்கல்வித்துறை: ம.தி.மு.க. நிர்வாகக்குழு கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றம்

vaiko

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகக் குழுக் கூட்டம், கழக அவைத் தலைவர் ஆடிட்டர் அர்ஜுனராஜ் தலைமையில் சென்னை எழும்பூரில் உள்ள தலைமைக் கழகம் தாயகத்தில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-


தீர்மானம் 1: இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தமிழ்நாட்டை வளர்ச்சிப் பாதையில் முன்னெடுத்துச் செல்லும் திராவிட மாடல் அரசு தொடர்ந்திடவும், இந்துத்துவ மதவாத சக்திகளை முறியடிக்கவும், கழகம் எடுத்த முடிவை 2026 சட்டப்பேரவைத் தேர்தலிலும் கடைபிடிப்பது என்று கழக நிர்வாகக் குழு தீர்மானிக்கிறது.

தீர்மானம் 2: இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகவுரையில் இடம்பெற்றிருக்கும் “மதச்சார்பற்ற” மற்றும் “சோசலிச” எனும் முக்கியமான வார்த்தைகளை நீக்க வேண்டும் என ஆர்.எஸ்.எஸ். பொதுச் செயலாளர் தத்தாத்ரேய ஹோசபாலே தெரிவித்துள்ளார். அவரது இந்த பேச்சு இந்திய ஜனநாயகக் கோட்பாடுகளுக்கு எதிரான ஒரு ஆபத்தான சிந்தனையாகக் கருதப்படுகிறது. இது கடும் கண்டனத்திற்குரியது.

தீர்மானம் 3: இந்தியா முழுவதும் வேளாண்மைக்காக பயன்படுத்தப்படும் நிலத்தடி நீருக்கு வரி விதிக்கப்படும் திட்டம் ஒன்றிய அரசால் அமல்படுத்தப்படும் எனப் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. இது, ஏற்கனவே நிலத்தடி நீர் வறட்சியால் பாதிக்கப்படும் உழவர்களுக்கு மிகுந்த சுமையாகும் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒன்றிய அரசின் நீர்வளத்துறை இது குறித்து உரிய விளக்கம் அளிக்கவில்லை. நாடு முழுதும் கொந்தளித்துள்ள உழவர்களின் கவலையைப் போக்க, வேளாண் பயன்பாட்டுக்கான நிலத்தடி நீருக்கு வரி விதிக்கப்படாது என்று ஒன்றிய அரசு திட்டவட்டமாக அறிவிக்க வேண்டும்.

தீர்மானம் 4: மதுரையில் ஜூன் 22-ந்தேதி இந்துத்துவ அமைப்புகள் முன்னின்று நடத்திய முருக பக்தர்கள் மாநாட்டில் திராவிட இயக்கக் கோட்பாடுகளை இழிவு படுத்தியும், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகிய தலைவர்களை சிறுமைப் படுத்தியும் காணொளி காட்சிகள் இடம் பெறச் செய்ததற்கு மறுமலர்ச்சி திமுக நிர்வாகக் குழு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது. தமிழ்நாட்டு மக்களின் சமய நம்பிக்கையை அரசியல் சுயலாபத்துக்காக பயன்படுத்த நினைக்கும் பா.ஜ.க.வின் முயற்சிகள் தகர்ந்து தவிடு பொடியாகும்.

தீர்மானம் 5: பேரறிஞர் அண்ணா அவர்களின் 117-வது பிறந்தநாள் விழா மாநில மாநாடு செப்டம்பர் 15 அன்று திருச்சியில் நடத்துவது என கழகப் பொதுக்குழுவில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவதற்கும், சட்டமன்றத் தேர்தலுக்கான வேலைத் திட்டங்களை முன்னெடுக்கவும் ஜூலை 1-ந்தேதியில் இருந்து ஜூலை 17-ந்தேதி வரையில் நடைபெற இருக்கும் மண்டல வாரியான கழக செயல்வீரர்கள் கூட்டங்களை திட்டமிட்டு சிறப்பாக நடத்துவதற்கு மாவட்டக் கழகங்கள் முனைந்து செயலாற்ற வேண்டும் என்று கழக நிர்வாக குழுத் தீர்மானிக்கிறது.

தீர்மானம் 6: தமிழகத்தில் பள்ளிக் கல்வியில் தொழிற்கல்வி பாடப்பிரிவுகள் முக்கியமான இடத்தை வகிக்கின்றன. மருத்துவம், பொறியியல், விவசாயம், கைவினைத் தொழில்கள், செவிலியர் பயிற்சி, தையல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் உள்ளிட்ட 15 துறைகளில், கற்றல் திறன் சவால் கொண்ட மாணவர்களுக்காகவே இந்தப் பாடப்பிரிவுகள் உருவாக்கப்பட்டன.

1978இல் தொழிற்கல்வி துவங்கிய போது 4,324 பணியிடங்களில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். ஆனால் 2007இல் 250 பேருக்கு மட்டும் நிரந்தர நியமனம் அளிக்கப்பட்டதைத்தவிர, அதன் பின் புதிய நியமனம் நடைபெறாத சூழல் உள்ளது. இப்போது, தொழிற்கல்வி ஆசிரியர்கள் ஓய்வு பெற்றால், அந்தப் பள்ளிகளில் அந்தப் பாடப்பிரிவுகளை மூட வேண்டும் எனும் உத்தரவை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. இது மாணவர்களை புறக்கணிக்கும், மற்றும் சமத்துவ கல்விக்கே எதிரான நடவடிக்கையாகும்.

தொழிற்கல்வி இடைநிற்றலைத் தவிர்க்கவும், சுயதொழில் துவங்கவும் வழிவகுக்கிறது. எனவே இதனைக் கருத்தில் கொண்டு தொழிற்கல்வி பாடப்பிரிவு ஆசிரியர்கள் ஓய்வு பெற்றால், அந்த ஆண்டோடு அப்பாடப்பிரிவை, மூட வேண்டும் என்கிற பள்ளிக்கல்வித்துறையின் உத்தரவைத் திரும்பப் பெற வேண்டும் என்று கழக நிர்வாக் குழு வலியுறுத்துகிறது.

Read more: மன அழுத்தம் முதல் சரும ஆரோக்கியம் வரை.. தினமும் டார்க் சாக்லேட் சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா..?

Next Post

2026ல் தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி.. அமித்ஷாவின் பேச்சுக்கு தேமுதிக வரவேற்பு..!! - பிரேமலதா விஜயகாந்த் பரபர பேச்சு

Sun Jun 29 , 2025
2026ல் தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி மலரும் என்ற அமித்ஷாவின் பேச்சுக்கு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வரவேற்பு அளித்துள்ளார். 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு அனைத்துக் கட்சிகளும் தயாராகி வருகின்றன. அதிமுக – பாஜக கூட்டணி உறுதியாகியுள்ளது. இந்நிலையில், தேமுதிக இதுவரை எந்தவொரு அறிவிப்பையும் வெளியிடாமல் உள்ளது. இந்த சூழலில், அடுத்தாண்டு ஜனவரி மாதம் நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் கூட்டணி குறித்த அறிவிப்பை வெளியிடுவதாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார். […]
Premalatha 2025

You May Like