திருவள்ளுவர் விருதினை பெற விரும்பும் தமிழறிஞர்கள் ஆன்லைனில் மூலமாக விண்ணப்பிக்கலாம் என்று தமிழ் வளர்ச்சித்துறை அறிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், 2024-க்கான திருவள்ளுவர் விருதுக்கும், 2023-க்கான 74 விருதுகளுக்கும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அதன்படி, திருவள்ளுவர் விருது மகாகவி பாரதியார் விருது, தமிழ்த்தென்றல் திரு.வி.க. விருது, கி.ஆ.பெ. விசுவநாதம் விருது, பாவேந்தர் பாரதிதாசன் விருது, காமராசர் விருது, பேரறிஞர் அண்ணா விருது பெறுபவர்களுக்கு ரூ.2 லட்சம் ரொக்கம், ஒரு சவரன் தங்கப்பதக்கம், தகுதியுரை மற்று பொன்னாடை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 3 பேருக்கு இலக்கிய மாமணி விருதுடன் ரூ.5 லட்சம் ரொக்கம், ஒரு சவரன் தங்கப்பதக்கம் மேலும், தமிழ் வளர்ச்சி துறை விருதுகள் பட்டியலில், தமிழ்த்தாய் விருதுடன் ரூ.5 லட்சம் ரொக்கம், கேடயம், தகுதியுரை வழங்கப்படும் என்றும் கம்பன் விருது, கபிலர் விருது, உ.வே.சா. விருது, இளங்கோவடிகள் விருது, உமறுப் புலவர் விருது, சொல்லின் செல்வர் விருது, ஜி.யு. போப் விருது, அம்மா இலக்கிய விருது, மொழி பெயர்ப்பாளர் விருது, ‘சிந்தனைச்சிற்பி’ சிங்காரவேலர் விருது, மறைமலையடிகளார் விருது, அருட்பெருஞ்சோதி வள்ளலார் விருது, அயோத்திதாசப் பண்டிதர் விருது, காரைக்கால் அம்மையார் ஆகிய விருதுகளுக்கு ரூ.2 லட்சம் ரொக்கம், கேடயம் வழங்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, தமிழ்ச் செம்மல் விருதுடன் (38 பேருக்கு) ரூ. 25,000 ரொக்கம் மற்றும் தகுதியுரை வழங்கப்படும். இந்த விருதுகளை பெற விண்ணப்பிப்போர் http://awards.tn.gov.in என்ற இணைய தளத்தின் வழியாகவோ அல்லது தமிழ் வளர்ச்சி இயக்குநர், தமிழ் வளர்ச்சி இயக்ககம், தமிழ்ச்சாலை, எழும்பூர், சென்னை – 600 008 என்ற முகவரிக்கு அஞ்சல் வாயிலாகவோ அக்.15ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்பலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு 044- 28190412, 28190413 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம்” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.