நடிகை கங்கனா ரனாவத் பாரத் என்ற பெயருக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.
இந்தியாவின் பெயரை ‘பாரத்’ என்று மாற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ஜி20 மாநாட்டில் பங்கேற்க உள்ள தலைவர்களுக்கு இரவு விருந்து வழங்குவதற்கான அழைப்பிதழ் குடியரசுத் தலைவர் சார்பில் அனுப்பப்பட்டுள்ளது. அதில், வழக்கமாக ‘இந்திய குடியரசுத் தலைவர்’ என்று இருப்பதற்கு பதிலாக, ‘பாரத் குடியரசுத் தலைவர்’ என இடம் பெற்றுள்ளது.
இந்நிலையில், நடிகை கங்கனா ரனாவத் தனது எக்ஸ் பக்கத்தில், ‘இந்தியா என்ற பெயரை நேசிக்க அதில் என்ன இருக்கிறது? முதலில் பிரிட்டிஷாரால் ‘சிந்து’ என்று உச்சரிக்க முடியாததால், ‘இண்டஸ்’ என்று பெயர் வைத்தார்கள். அதன் பிறகு அது ‘இந்து’ என்றும் ‘இந்தோ’ என்றும் மாற்றம் அடைந்து இறுதியில் ‘இந்தியா’ என்று மாறியது. மகாபாரத காலத்திலிருந்தே, குருஷேத்ரா யுத்தத்தில் பங்கேற்ற அனைத்து பேரரசுகளும் பாரதம் எனும் ஒரே கண்டத்தின் கீழ் இருந்தன. எனவே, நம்மை ஏன் அவர்கள் இந்து என்றும் சிந்தும் என்றும் அழைத்தனர்? பாரத் என்ற பெயர் மிகவும் அர்த்தம் வாய்ந்ததாக இருக்கிறது.
ஆனால், இந்தியா என்ற பெயருக்கு என்ன அர்த்தம் இருக்கிறது? அவர்கள் சிவப்பு இந்தியர்கள் என்று அழைத்ததை நான் அறிவேன். ஏனென்றால், இந்தியன் என்றால் அடிமை என்று அர்த்தம். எனவே, தான் அவர்கள் நமக்கு இந்தியர்கள் என்று பெயரிட்டனர். அது ஆங்கிலேயர்களால் நமக்கு கொடுக்கப்பட்ட அடையாளம். பழைய அகராதிகளில் இந்தியன் என்றால் அடிமை. தற்போது தான் அதனை அவர்கள் மாற்றினர். நாம் ‘பாரதியர்கள், இந்தியர்கள் அல்ல’ என்று பதிவிட்டுள்ளார்.