சீமான் செய்து வரும் கோமாளித்தனங்களை இளைஞர்கள் எச்சரிகையுடன் புரிந்து கொள்ள வேண்டும் என்று வன்னி அரசு தெரிவித்துள்ளார்
ஆடு மாடுகளுக்கான மாநாட்டை தொடர்ந்து மரங்களுக்கான மாநாடு நடத்தப்படும் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். அவரின் இந்த அறிவிப்பை விசிக பொதுச்செயலாளர் வன்னி அரசு கடுமையாக விமர்சித்துள்ளார்.. இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “
நாதக மற்றும் கோனார் சங்கங்களின் சார்பில் நடைபெற்ற ஆடு மாடுகளுக்கான மாநாட்டை அடுத்து, மரங்களுக்கான மாநாட்டை நடத்தப்போவதாக சீமான் அறிவித்துள்ளார். சீமான் இதுவரை சாதி ஆணவப்படுகொலைகளுக்கு எதிராக போராட்டமோ மாநாடோ நடத்தியதில்லை. ஆனால், ஆணவப்படுகொலைகளை ஆதரித்தும் குடி பெருமையை ஆதரித்தும் பிதற்றி வருகிறார்.
பெண்களுக்கான பாதுகாப்பு குறித்தோ அல்லது பெண்களின் உரிமை குறித்தோ இதுவரை மாநோடோ போராட்டமோ நடத்தியதில்லை. ஆனால், “குச்சிக்குள்ள இப்ப தான் சமஞ்சு இருக்குற பெண்ணை தூக்கி போய் கரும்புக்காட்டுக்குள்ள கற்பழிச்சது போல கதறுறீங்க”என பெண்களை இழிவு படுத்தி தான் பேசி வருகிறார். சோசலிசம்,செக்யூலரிசம் போன்றவற்றை இந்திய அரசியலமைப்புச்சட்டத்திலிருந்து எடுக்க வேண்டும் என கொக்கரிக்கும் ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜகவுக்கு எதிராக இதுவரை போராட்டமோ மாநாடோ நடத்தியதில்லை.
ஆனால், பாஜகவின் அத்தனை செயல்திட்டங்களையும் ஆதரித்து கள்ள மவுனம் சாதித்து வருகிறார் சீமான். தமிழ்த்தேசியத்துக்கு எதிரான ஒரே நாடு ஒரே மொழி கொள்கையை நடைமுறைப்படுத்தும் பாஜகவுக்கு எதிராக இதுவரை மாநாடோ போராட்டமோ நடத்தியதில்லை. ஆனால், ஆடு மாடுகளுக்காகவும் மரங்களுக்காகவும் போராட்டம் நடத்துகிறார். இப்படியான கோமாளித்தனங்களுக்கு பெயர் தான் தமிழ்த்தேசியமா? மக்களுக்கான பிரச்சனைகளை திசை திருப்பி ஆடு மாடுகளுக்காக போராடுவது தான் தமிழ்த்தேசியமா?
சாதிய- மதவாத- இந்துத்துவ- இந்திய தேசியத்துக்கு எதிராக இளைஞர்கள் போராடுவதை திசை திருப்பவே இப்படியான கோமாளித்தனங்களை சீமான் செய்து வருகிறார் என்பதை இளைஞர்கள் எச்சரிகையுடன் புரிந்து கொள்ள வேண்டும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.