கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் என்பது தமிழக அரசால் செயல்படுத்தப்படும் ஒரு முக்கியமான நலத்திட்டமாகும். 2023 ஆம் ஆண்டில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார். குடும்ப தலைவிகளுக்கு பொருளாதார சுதந்திரத்தை வழங்கும் நோக்கத்தோடு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டது. இந்த திட்டம் மூலம் மாதம் ரூ.1000 குடும்ப தலைவிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டு வருகிறது.
இதன் மூலம் கோடிக்கணக்கான பெண்கள் பயனடைந்து வருகின்றனர். ஒவ்வொரு மாதமும் 15-ம் தேதி ரூ.1000 பணம் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. அதேசமயம் தகுதியான விடுபட்ட பெண்களுக்கும் உரிமை தொகை வழங்கப்படும் என கடந்த சட்ட சபை கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி விண்ணப்பம் செய்வதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு செய்து வருகின்றது. இதனைத் தொடர்ந்து மகளிர் உரிமைத்தொகை திட்ட விரிவாக்கம் தொடங்கியது.
கடந்த முறை மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டவர்கள் இந்த முறை விண்ணப்பிக்கலாம். ஆவணங்கள் சரியில்லாமல் நிராகரிக்கப்பட்டவர்கள், கடந்த சில மாதங்களில் திருமணமான பெண்களும் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டது. மேலும் குடும்ப தலைவி மட்டுமே இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க வேண்டியது இல்லை என்றும், ஒரு குடும்பத்தில் தாய் இறந்துவிட்ட நிலையில், அந்த குடும்பத்தில் இருக்கும் 21 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்றும் கூறப்பட்டது.
மாற்றுத்திறனாளி பென்சன் அல்லது பராமரிப்பு உதவித்தொகை, முதியோர் பென்ஷன், முதல்வரின் உழவர் பாதுகாப்பு திட்டம், அமைப்புசாரா தொழிலாளர் நல வாரிய முதியோர் பென்ஷன், கைப்பெண் பென்ஷன், திருமணமாகாத பெண்களுக்கான பென்ஷன் பெறுபவர்கள் ஆகியோர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்க முடியாது. ஆனால் அவர்களது குடும்பத்தில் தகுதிவாய்ந்த குடும்பத் தலைவிகள் இருந்தால் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read more: மஸ்கி அகழ்வாராய்சி.. 4,000 ஆண்டுகளுக்கு முன் மனிதர்கள் வாழ்ந்த ஆதாரம் கண்டுபிடிப்பு..!!