கோடை வெயில் காரணமாக தமிழ்நாட்டில் இந்தாண்டு பள்ளி வகுப்புகள் 10 நாட்கள் தாமதமாகவே தொடங்கியது. ஆனாலும், பள்ளி தொடங்கிய பின் எல்லா வாரமும் சனிக்கிழமை பள்ளிகள் வைத்து இந்த நாட்கள் ஈடுசெய்யப்பட்டது. பள்ளிகளில் காலாண்டு பாடத்திட்டம் முடிக்கப்பட்ட நிலையில், தற்போது காலாண்டு தேர்வுகள் தொடங்க இருக்கின்றன.
6 முதல் 10ஆம் வகுப்புகளுக்கு செப்டம்பர் 19ஆம் தேதி முதல் செப்டம்பர் 27ஆம் தேதி வரையும், 11, 12ஆம் வகுப்புகளுக்கு செப்டம்பர் 15ஆம் தேதி முதல் செப்டம்பர் 27ஆம் தேதி வரை காலாண்டு தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தேர்வு தொடங்க இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், பொது வினாத்தாள் முறையை அமல்படுத்த இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, இந்த காலாண்டு விடுமுறையுடன் அரசு விடுமுறையும் வருகிறது. இதனால் விடுமுறையை நீட்டிக்க வேண்டும் என பல தரப்பினர் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், கோடை விடுமுறையில் எந்த மாற்றமும் இல்லை என்று பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.