முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அக்.3ஆம் தேதி மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மாநாடு நடைபெறும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல்துறை, வனத்துறை அதிகாரிகள் பங்கேற்கும் மாநாடு அடுத்த மாதம் நடைபெறவுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”அடுத்த மாதம் 3 மற்றும் 4ஆம் தேதிகளில் முதலமைச்சர் தலைமையில் சென்னையில் மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல்துறை, வனத்துறை அதிகாரிகள் பங்கேற்கும் இரண்டு நாள் மாநாடு நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாநாட்டில் அமைச்சர்கள், அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை மற்றும்
வனத்துறை உயரதிகாரிகள் பங்கேற்க உள்ளனர். மாவட்ட நிர்வாகம், சட்டம் ஒழுங்கு நிலை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து முதலமைச்சர் விரிவாக ஆய்வு செய்ய உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மாநிலத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லும் விதமாக அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களை ஆய்வு செய்வதுடன், அதை தொடர்ந்து சிறப்பாக செயல்படுத்துவது குறித்து இந்த மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரைகள் வழங்குவார் என்று கூறப்படுகிறது.