திருவள்ளுவர், அம்பேத்கர், திராவிட இயக்க அறிஞர்கள் குறித்து இந்துத்துவ சிந்தனையாளரான ஆர்.பி.வி.எஸ். மணியன் ஒருமையில் இழிவாக விமர்சித்து பேசிய விவகாரத்தில் அவர் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
இது தொடர்பாக ஆன்மிக சொற்பொழிவாளர் ஆர்.பி.வி.எஸ். மணியன் பேசியிருப்பதாவது: பறையர் எவனாவது பள்ளர்ல கல்யாணம் முடிப்பானா? நீங்க எல்லாம் அடிச்சுட்டு நிற்கிறவனுக. அந்த அம்பேத்கர்தான் கான்ஸ்டிடியூசனை கொடுத்தார்னு பல பேரு எழுதிட்டு இருங்காங்க.. பேசிகிட்டு இருக்கானுக.. இப்ப இருக்கிற ஆட்சிக்காரனும் இதையே சொல்லிகிட்டு இருக்கானுங்க.
அரசியல் சட்டத்தை உருவாக்கியது யார்னு சேர்மன் பேரை போட்டால் ராஜேந்திர பிரசாத் பெயரைத்தான் போடனும். அங்கு கிளார்க்காக வேலை பார்த்தவன், டைப் அடிச்சவன், டைப்புக்கு ப்ரூப் பார்த்தவன். அதான் அம்பேத்கர். அவர் தன்னுடைய மூளையில் இருந்து அரசியல் சாசனத்தை எழுதியதாக எங்கேயும் எழுதி வைக்கவில்லை.
இந்த பிராமணனை இந்துன்னு சொல்ல வைக்கிறதுக்கே ரொம்ப காலமாச்சு. அவன் வைதீகன், வைதீக தர்மம்னு சொன்னான்.. சனாதன தர்மத்தை பின்பற்றுகிறோம்னு சொன்னான்.. இந்த நாடு இந்து நாடாக இருக்கனும்னா மோடியைத் தவிர, பாஜகவை தவிர வேறு யாரும் காப்பாற்ற முடியாது. எவனோ ஒருத்தன் திருவள்ளுவர், திருக்குறள்னு சொல்லிப்புட்டான். திருவள்ளுவர்னு ஒரு ஆளே கிடையாது. அந்த ஆளு ஒருத்தர் இருந்தார்னு சொல்றது கற்பனை. அதைவிட அந்த ஆள் திருக்குறளை எழுதினார்னு சொல்றது நல்ல கற்பனை.
ராமர் பிறந்த நட்சத்திரம் எனக்கு தெரியும். ராமர் பிறந்த நாளை ஊர்தோறும் கொண்டாடுகிறோம். வள்ளுவர் என்னைக்கு பிறந்தார்னு சொல்லுவியா? அப்பா அம்மா யாருன்னு தெரியுமாடா? திருவள்ளுவரோட அப்பன் பேரு தெரியுமாடா? ஆதிங்கிறான்.. பகவான்கிறான்.. அவனெல்லாம் வாழ்ந்ததுக்கு அடையாளம் இருக்காடா” என்று ஆர்விபிஎஸ் மணியன் பேசியிருந்தார்.
இந்தப் பேச்சை அப்படியே எக்ஸ் தளத்தில் பகிர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு காவல்துறை உள்ளிட்டோரின் ஐடிகளுக்கும் அனுப்பி வைத்து இப்படி இழிவாக பேசுகிற நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலர் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், திருவள்ளுவர், அம்பேத்கர், திராவிட இயக்க அறிஞர்கள் குறித்து இழிவாக பேசிய ஆர்.பி.வி.எஸ். மணியனை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.