மழைக்காலம் என்பதால் அவ்வப்போது மழை பெய்து ஆங்காங்கு மழை நீர் தேங்கி, கொசுக்கள் பெருக்கமடைகின்றன. இதனால் வீட்டில் கொசுத் தொல்லையால் நிறைய பேர் அவதிப்படுவதுண்டு. மேலும் தற்போது டெங்கு காய்ச்சலால் நிறைய பேர் பாதிக்கப்படுகிறார்கள். டெங்கு காய்ச்சலுக்கு முக்கிய காரணமே கொசுக்கள் தான். எனவே கொசுக்களிடம் இருந்து நாம் பாதுகாப்பாக இருக்க வேண்டியது அவசியம். கொசுக்களை அழிக்க பல்வேறு பொருட்கள் கடைகளில் விற்கப்பட்டாலும், இன்னும் பலரது வீடுகளில் கொசுவர்த்தி சுருள் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இந்த கொசுவர்த்தி சுருள் கொசுக்களை அழிப்பதோடு, நம் ஆரோக்கியத்தையும் மெதுவாக அழிக்கும் என்பது தெரியுமா?
கொசுவர்த்தியில் இருந்து வெளிவரும் புகையை அதிகமாக ஒருவர் சுவாசிக்கும் போது, அது நுரையீரலை படுமோசமாக பாதிப்பதோடு, பல மோசமான நோய்களின் அபாயத்தையும் அதிகரிக்கும். இப்போது ஒருவர் கொசுவர்த்தி சுருளின் புகையை தினமும் சுவாசித்தால், எந்த மாதிரியான பிரச்சனையால் அவதிப்படக்கூடும் என்பதைக் காண்போம். கொசுவர்த்தி சுருளில் உள்ள பொருட்கள், தலைவலியைத் தூண்டக்கூடியது. அதனால் தான் பெரும்பாலானோர் கொசுவர்த்தியை ஏற்றியதும் தலைவலியை சந்திக்கிறார்கள். ஆகவே கொசுக்களை அழிக்க கொசுவர்த்தியை பயன்படுத்துவது அவ்வளவு நல்லதல்ல. முடிந்தவரை, அதன் பயன்பாட்டைக் குறைத்துக் கொள்ளுங்கள்.
கொசுவர்த்தியில் சருமத்தில் தடிப்புகள் மற்றும் அழற்சியை ஏற்படுத்தும் உட்பொருட்கள் நிறைந்துள்ளன. ஆகவே ஏற்கனவே அழற்சியைக் கொண்டவர்கள், கொசுவர்த்தியைப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பதே நல்லது. இல்லாவிட்டால், அது நிலைமையை மோசமாக்கிவிடும். கொசுக்களை அழிக்க பயன்படுத்தப்படும் கொசுவர்த்தி சுருளில் கார்சினோஜென்கள் உள்ளன. இந்த கார்சினோஜென்களை ஒருவர் தொடர்ந்து சுவாசிக்கும் போது, அது நுரையீரலில் புற்றுநோயை உண்டாகும் செல்களின் வளர்ச்சியை அதிகரித்து, புற்றுநோயின் அபாயத்தை அதிகரித்துவிடும்.
வீட்டில் குழந்தைகள் இருந்தால், முடிந்தவரை கொசுவர்த்தி சுருளை பயன்படுத்துவதைத் தவிர்ப்பது நல்லது. தினமும் கொசுவர்த்தி சுருளை ஏற்றி, அதன் புகையை சுவாசித்தால், அதில் உள்ள கெமிக்கல்கள் குழந்தைகளுக்கு தீவிரமான சுவாச பிரச்சனைகளை ஏற்படுத்தி, அவர்களின் ஆரோக்கியத்தை மோசமாக்கலாம். ஆகவே இந்த விஷயத்தில் எச்சரிக்கையாக இருங்கள்.