கூடுவாஞ்சேரியில் போலீஸ் என்கவுண்டரில் இருவர் கொல்லப்பட்டது குறித்து சிபிசிஐடி விசாரணை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை அடுத்த கூடுவாஞ்சேரி காரணை புதுச்சேரி பகுதியில் கடந்த ஆகஸ்ட் 1ஆம் தேதி வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீஸாரை தாக்கிவிட்டு தப்பியோடிய வினோத் என்ற சோட்டா வினோத் மற்றும் ரமேஷ் ஆகிய 2 ரவுடிகள் காவல்துறையினரால் என்கவுண்டரில் கொல்லப்பட்டனர். இதுகுறித்து சிபிசிஐடி விசாரிக்க கோரி சோட்டா வினோத்தின் தாயார் ராணி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், சம்பவத்தன்று வினோத் மற்றும் ரமேஷ் சிறுசேரியில் உள்ள ஹோட்டலில் தங்கியிருந்தனர். அப்போது அங்கு வந்த போலீஸார் இருவரையும் ஹோட்டலில் இருந்து அழைத்து சென்று என்கவுண்டரில் சுட்டுக் கொன்றதாக குற்றம்சாட்டியுள்ளார். மேலும், இது ஒரு போலி என்கவுண்டர் எனவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார். எனவே, இதுகுறித்து செங்கல்பட்டு மாஜிஸ்திரேட் விசாரணை மற்றும் சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமெனவும் மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.
இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது போலீஸ் என்கவுண்டர், லாக் அப் டெத் உள்ளிட்டவை குறித்து சிபிசிஐடி விசாரிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளதாக மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. இதையடுத்து, இந்த என்கவுண்டர் சம்பவம் தொடர்பான வழக்கின் விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றிய நீதிபதி, டிஎஸ்பி அந்தஸ்து அதிகாரி விசாரணை நடத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டார். இதையடுத்து, இந்த வழக்கு அக்டோபர் 10ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.