எஸ்பிஐ வங்கியில் காலியாக உள்ள 6,160 தொழில்பழகுநர் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பாரத ஸ்டேட் வங்கி 6,160 தொழில்பழகுநர் (Apprentice) காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு, தெலங்கானா, மேற்கு வங்காளம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உள்ள எஸ்.பி.ஐ. அலுவலங்களில் தேர்வு செய்பவர்கள் பணியில் அமர்த்தப்படுவர். இதற்கு விண்ணப்பிக்க நாளை (செப்.21) கடைசி தேதி. இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் கடைசி நேரம் வரை காத்திருக்காமல் முன்னதாகவே விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.
தமிழ்நாட்டில் மட்டும் 648 பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அரசு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் / கல்லூரியில் இருந்து ஏதாவது ஒரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஓராண்டு கால பணி என்பதால், பணி திறன் அடிப்படையில் பணி நீடிப்பு வழங்கப்படும்.
இந்தப் பணிக்கு ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் மொழித்திறன் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க பொதுப்பிரிவினருக்கு ரூ.300 கட்டணமாகவும், பட்டியலின/பழங்குடியின/ முன்னாள் பொதுத்துறை ஊழியர்கள் ஆகியோர்களுக்கு விண்ணப்ப கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. https://bank.sbi/web/careers , https://www.sbi.co.in/web/careers உள்ளிட்ட இணையதளங்கள் மூலமாக நாளைக்குள் விண்ணப்பிக்கலாம்.