காஞ்சிபுரம் மாவட்டம் ஓரிக்கை பகுதியைச் சேர்ந்தவர் திருமலை (50). கூலித்தொழிலாளியான இவர், காஞ்சிபுரம் – உத்திரமேரூர் சாலையில் ஓட்டலில் அடிக்கடி சாப்பிடுவது வழக்கம். இந்நிலையில், திருமலை தனக்கு ஓசியில் சாப்பாடு தரும்படி அடிக்கடி ஓட்டல் நடத்திவரும் பச்சையம்மாளிடம் கேட்டு வந்துள்ளார். இதனால் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இதேபோல் நேற்று மாலையும் தனக்கு ஓசியில் சாப்பாடு கேட்டு ரகளையில் ஈடுபட்டுள்ளார். இதனை ஓட்டலில் ஊழியராக வேலைபார்த்து வந்த ராமு என்கிற ராமச்சந்திரன்(40) என்பவர் கண்டித்துள்ளார். இதனால், அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டுள்ளது. ஆத்திரம் அடைந்த ராமச்சந்திரன் அருகில் கிடந்த சவுக்கு கட்டையால் திருமலையை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த ஓட்டலில் இருந்தவர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். உடனே ராமச்சந்திரன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காஞ்சிபுரம் தாலுகா போலீசார், திருமலையின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். பின்னர், அதே பகுதியில் பதுங்கி இருந்த ராமச்சந்திரனை கைது செய்தனர். அவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.