வாய்விட்டு சிரித்தால்(laugh) நோய் விட்டு போகும் என்று பெரியவர்கள் என்ன சும்மாவா சொன்னார்கள்… நாம் சிரிக்கும் பொழுது நம்முடைய உடலிலும், மனதிலும் உள்ள அழுத்தங்களும், கவலைகளும் வெளியேறுகிறது. ஒருவர் நன்றாக சிரித்த பிறகு அவருடைய மன அழுத்த ஹார்மோன்களின் அளவுகள் குறைந்தது ஆய்வில் தெரியவந்துள்ளது. சந்தோஷமாக சிரிப்பது உங்களுடைய தசைகளை 45 நிமிடங்கள் வரைக்கும் தளர்வாக வைத்திருக்கிறது. சிரிப்பு நம்முடைய மனதையும் உடலையும் வலிமையோடு புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். நாம் சிரிக்கும் பொழுது நம்முடைய உடலில் சுமார் 300 தசைகள் அசைகிறது.
இது உடல் பதற்றம் மற்றும் மன அழுத்தத்தை போக்குகிறது. நம்முடைய முகத்திலுள்ள தசைகளும் நெஞ்சுத் தசைகளும் பலம் அடைந்து நமக்கு ஆரோக்கியத்தைக் கொடுக்கிறது. சிரிக்கும் பொழுது நோய் எதிர்ப்பு சக்தியை உடலில் அதிகரிக்கிறது. ஒரு நாளில் குழந்தைகள் சராசரியாக 400 முறை சிரிக்கிறது. ஆனால் வயது வந்தவர்கள், பெரியவர்கள் சுமார் 15 தடவைகள் மட்டுமே சிரிக்கிறார்கள் என ஆய்வுகள் சொல்கிறது. ஆறு வயது குழந்தை பெரியவர்களை விட மூன்று மடங்கு அதிகமாக சிரிக்கிறது. சிரிப்பது மனிதர்களிடம் மட்டுமல்லாமல் விலங்குகளிடமும் காணப்படுகிறது. நாய் பூனை போன்ற விலங்குகளும் சிரிக்கிறது.
சிரிப்பு நம்முடைய உடலில் வலியை குறைக்கவும் தொற்று நோய்களை தடுக்கவும் உதவுகிறது. சிரிப்பு ஒருவருடைய மன நிலையில் நேர்மறையான மாற்றங்களை கொண்டு வரக்கூடிய எண்டோர்பின்களை வெளியிட உதவுகிறது. அதிகளவில் சிரிக்கும் பொழுது சாதாரண சுவாசத்தை விட அதிக அளவு ஆக்சிஜன் நுரையீரலுக்கு வருகிறது. சிரிப்பு இதய நோய் அபாயத்தை குறைக்கிறது. ஒரு நாளைக்கு 15 நிமிடங்கள் சிரித்தால் உடல் எடை குறையும். தினமும் 10லிருந்து 15 நிமிடங்கள் சிரிக்கும் பொழுது உடலில் பத்திலிருந்து 40 கலோரிகள் எரிகிறது.