செப்டம்பர் 15ஆம் தேதி முதல் அக்டோபர் 2ஆம் தேதி வரை ‘சுகாதார சேவை’ என்ற பெயரில் நாடு முழுவதும் மாபெரும் தூய்மை இயக்கம் நடந்து வருகிறது. மகாத்மா காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு இந்தப் பிரச்சாரம் நடைபெறுகிறது. அதன் ஒரு பகுதியாக, ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியின் மூலம், நாடு முழுவதும் உள்ள பொது இடங்களில் அக்டோபர் 1ஆம் தேதி காலை 10 மணிக்கு மெகா துப்புரவுப் பணியில், பொதுமக்கள் பங்கேற்க வேண்டும் என்று பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
இதுகுறித்து, மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி தனித்துவமான அழைப்பை விடுத்துள்ளார். அக்டோபர் 1ஆம் மெகா துப்புரவு பணி நடக்கிறது. நாடு முழுவதும், சந்தை பகுதிகள், ரயில் பாதைகள், நீர்நிலைகள், சுற்றுலா தலங்கள், மத வழிபாட்டுத் தலங்கள் உள்ளிட்ட பொது இடங்கள் சுத்தம் செய்யப்படும்.
சமூகத்தின் அனைத்து தரப்பினரும் இதில் பங்கேற்க வேண்டும். ஒவ்வொரு நகராட்சி, பஞ்சாயத்து, சிவில் விமான போக்குவரத்து, ரயில்வே, தகவல் தொழில்நுட்பம் மற்றும் பிற மத்திய அரசு துறைகள் மற்றும் பொது நிறுவனங்கள் தூய்மைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தொண்டு நிறுவனங்கள், குடியிருப்போர் நலச் சங்கங்கள், தனியார் அமைப்புகள் இவற்றை நடத்துவதற்கு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் மாவட்ட நிர்வாகங்களின் இணையதளங்களில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.