கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்குத் தொடா்பான சிபிசிஐடி விசாரணைக்கு முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் காா் ஓட்டுநா் கனகராஜின் சகோதரா் தனபால் 2-வது முறையாக இன்று நேரில் ஆஜராகியுள்ளார்.
சிபிசிஐடி விசாரணைக்கு செல்லும் முன் செய்தியாளர்களை சந்தித்த அவர், “முதல் கட்ட விசாரணையில் 40-க்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டன. இன்று மற்ற கேள்விகளை கேட்க இருக்கின்றனர். கனகராஜ் எடுத்து வந்த பைகள் யாரிடம் கொடுத்தார்கள் என்பது குறித்தும் தெரிவித்துள்ளேன். இதேபோல பல கொலைகளை பழனிசாமி செய்திருக்கிறார். இதுகுறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும். எடப்பாடி பழனிசாமி சொல்லிதான் கனகராஜ் இந்த சம்பவங்களை செய்தார். இதை என் தம்பி என்னிடம் சொல்லியிருக்கிறார்.
இதற்கு முன்னர் விசாரணை நடத்திய அதிகாரியை விலைக்கு வாங்கி விட்டனர். இப்போது நேர்மையான அதிகாரிகள் உள்ளனர். எடப்பாடி பழனிச்சாமி, இளங்கோவன், தங்கமணி, வேலுமணி ஆகியோர் கனகராஜை நேரடியாக மூளை சலவை செய்து இந்த விவகாரத்தில் ஈடுபடுத்தியுள்ளனர். எடப்பாடி பழனிசாமி முதுகில் குத்தி முன்னே வந்தவர். நேரடியாக எதுவும் செய்யமாட்டார்.
சுதாகர் ஐஜி நடத்திய விசாரணையில் திருப்தி இல்லை. விசாரணையில் என்னை அடித்து துன்புறுத்தினார்கள். திமுக ஆட்சியில் உயர் அதிகாரிகள் மட்டும் தான் மாறி உள்ளனர். பிற அதிகாரிகள் இன்னும் எடப்பாடி பழனிசாமிக்குதான் பணி செய்து வருகின்றனர். சிபிசிஐடி போலிசார் எத்தனை நாள் விசாரணை நடத்தினாலும், பதில் சொல்ல நான் ரெடியாக இருக்கிறேன்.
சென்னையில் எடப்பாடி பழனிசாமியின் வீட்டில் 5 நாட்கள் கனகராஜை மூளை சலவை செய்துள்ளனர். அனைத்து உதவியும் செய்வதாக கனகராஜிடம் சொல்லியுள்ளனர். எடப்பாடி பழனிசாமியை விசாரித்தால் அனைத்து உண்மைகளும் தெரியவரும். எடப்பாடி பழனிசாமி வீட்டில்தான் சதிதிட்டம் போடப்பட்டது. எடப்பாடியுடன் இளங்கோவன், வேலுமணி, தங்கமணி உள்ளிட்டோர் இருந்தனர். எடப்பாடி பழனிசாமியை விசாரிக்க வேண்டும். அவரை விசாரிக்க சம்மன் அனுப்ப வேண்டும்” எனத் தெரிவித்தார்.