பொதுவாக யாரிடம் போய் “இன்னைக்கு காலையில என்ன சாப்டீங்க” என்று கேட்டால் அவர்களிடம் இருந்து வரும் பதில் பெரும்பாலாக இட்லி அல்லது தோசை தான். அந்த அளவிற்கு இட்லி தோசை ராஜ்யம் நடக்கிறது. இதனால் வேலைக்குச் செல்லும் பலர் வீக் எண்ட் சமயங்களில் இட்லி , தோசை மாவை ஒரு வாரத்திற்கு தேவையான அளவு அரைத்து வைத்துக் கொள்வதுண்டு. அப்படி மொத்தமாக அரைத்த மாவை அதிக நாட்கள் புளிக்காமல் பதப்படுத்துவது சற்று கடினம். அப்படி நீங்கள் கஷ்டப்பட்டு அரைத்த மாவை ஒரு வாரம் ஆனாலும் புளிக்காமல் வைக்க வேண்டுமா? அப்போ தொடர்ந்து படியுங்கள்..
முதலில், இட்லி அரிசியை 4 மணி நேரமும், உளுந்தை 3 மணி நேரமும் ஊற வைக்கவும். இதற்க்கு குறைவாக ஊறினால் மாவு புளித்து போக வாய்ப்பு உள்ளது. அதோடு வெந்தயம் கொஞ்சம் ஊற வைத்துக் கொள்ளுங்கள். கிரைண்டரில் மாவு அரைப்பதற்கு முன் ஒரு முறை நன்கு கழுவி விடுங்கள். நாம் கடந்த முறை மாவு அரைத்த போது, நன்கு கழுவி வைத்தாலும் அதன் புளிப்புத்தன்மை கிரைண்டரில் ஒட்டியிருக்கும். அதனால் கழுவாமல் அரைத்தால் மாவு சீக்கிரம் புளித்து விடும். பின்னர், உளுந்தை போட்டு நீங்கள் அரைக்கும் பொழுது கைப்படாமல் தண்ணீர் இடையிடையே தெளித்து, ஒரு கரண்டி எடுத்து தள்ளி விட்டு அரைக்கலாம்.
தேவையான தண்ணீரை சேர்க்க ஐஸ் வாட்டர் பயன்படுத்துங்கள். உளுந்து அரைத்து முடித்ததும், கைகளை ஒரு முறை நன்கு சுத்தம் செய்து விட்டு உளுந்தை எடுத்து ஒரு பாத்திரத்தில் வைத்துக் கொள்ளுங்கள். எவர்சில்வரை விட பிளாஸ்டிக்கில் மாவை எடுத்தால் விரைவில் புளிப்பது இல்லை. அதனால் மாவு புளிக்காமல் இருக்க பிளாஸ்டிக் டப்பாக்கள் உபயோகிப்பது நல்லது.
அதன் பின் அரிசியை போட்டு நீங்கள் வழக்கம் போல் எப்படி தண்ணீர் ஊற்றி அரைப்பீர்களோ அதே போல் ஊற்றி அரைக்க வேண்டும். இப்போதும் ஐஸ் வாட்டரை மட்டும் பயன்படுத்துங்கள். உளுந்தை விட அரிசி சீக்கிரம் அரைபட்டு விடும். பின்னர், அரிசி அரைந்து முடிந்ததும் மாவை எடுக்காமல் கிரைண்டரில் ஏற்கனவே நாம் அரைத்து எடுத்து வைத்திருந்த உளுந்தையும் அரிசியுடன் சேர்த்து ஒரு ஐந்து நிமிடம் ஆட்டி எடுக்க வேண்டும். பின்னர், மாவை பாத்திரத்தில் அப்படியே கவிழ்த்து கை வைக்காமல் கொட்டிக் கொள்ளுங்கள். பாத்திரத்தில் எடுத்த மாவை உப்பு சேர்க்காமல் மூடி வைத்து ஃப்ரிட்ஜில் அப்படியே எடுத்து வைத்து விடுங்கள். நாம் சுத்தமான முறையில் கை படாமல் உப்பு சேர்க்காமல் அரைத்து எடுத்து வைத்ததால் மாவு அவ்வளவு சீக்கிரமாக புளிக்காது.