தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி உடல்நலக்குறைவால் மதுரையில் உள்ள மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திண்டுக்கல்லில் உள்ள தனது இல்லத்தில் திமுக துணைப் பொதுச் செயலாளரும், அமைச்சருமான ஐ.பெரியசாமிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, வடமலையான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு அங்கு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டது. ரத்தத்தில் சர்க்கரை அளவு வெகுவாக அதிகரித்திருப்பது பரிசோதனை முடிவுகளில் தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து அமைச்சர் ஐ.பெரியசாமி வழக்கமாகச் செல்லும் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனைக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அனுமதிக்கப்பட்ட நிலையில், அவரது உடல் நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். முன்னதாக, ஊரகப் பகுதிகளில் ஏற்படும் குறைகளை களையும் பொருட்டு ‘ஊராட்சி மணி’ என்ற அமைப்பு ஊரக வளர்ச்சி ஊராட்சித் துறையால் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் பொது மக்கள் தங்கள் குறைகளைத் தெரிவிக்க ஊராட்சிகளைத் தொடர்பு கொள்ளும் வகையில் ஒரு இலவச குறை தீர்வு அழைப்பு எண் 155340 ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் தொடக்க விழா நிகழ்வுகளில் அமைச்சர் ஐ.பெரியசாமி பங்கேற்றிருந்தார்.