கன்னியாகுமரி மாவட்டம், புத்தளம் மணவாளபுரத்தை சேர்ந்தவர் முத்துராஜ். கொத்தனாரான இவருக்கு ரதி என்ற மனைவியும், ஒன்றரை வயதான ஸ்ரீஹரிஷ் என்ற மகனும் உள்ளனர். இவர்கள் குடும்பத்துடன் திருச்செந்தூர், சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சென்றுள்ளனர். அங்கு கோயில் வளாகத்தில் உள்ள மண்டபத்தில் தங்கியிருந்த போது கடந்த 5-ம் தேதி பெண் ஒருவர் ரதியிடம் பேசி பழகியுள்ளார். அப்போது குழந்தைக்கு ஐஸ்கிரீம் வாங்கி வருவதாகச் கூறிவிட்டு, குழந்தை ஹரீஷை கடத்தி சென்றுள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், திருச்செந்தூர் கோயில் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், போலீஸார் வழக்கு பதிவு செய்து, சி.சி.டி.வி கேமரா பதிவுகளை வைத்து தீஆய்வு செய்தனர். ஆய்வில், ரதியிடம் நட்பாகப் பழகிய அதே பெண், குழந்தை ஸ்ரீஹரீஷை தூக்கிக்கொண்டு, செல்போனில் பேசியபடியே ஒருவரின் பைக்கில் அமர்ந்து செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்துள்ளது. குழந்தையை கடத்தி சென்ற பெண் யார் என்று விசாரணை நடத்தனர்.
விசாரணையில், குழந்தையை கடத்தியது சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த பாண்டியன் மற்றும் அவரது மனைவி திலகவதி என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து, கோவை மாவட்டம் பூண்டி பகுதியில் தலைமறைவாக இருந்த கடத்தல் தம்பதியை போலீஸார் கைது செய்து, விசாரணை நடத்தினர். இதைத்தொடர்ந்து, சேலம் மாவட்டம் ஆத்தூரில் உள்ள பாண்டியனின் தாய் பச்சையம்மாளிடமிருந்து குழந்தை மீட்கப்பட்டு திருச்செந்தூரில் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதற்கிடையில், காவல் நிலையத்தில் திலகவதி மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
இதையடுத்து, கைது செய்யப்பட்ட பாண்டியனிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில், “எனக்கும் திலகவதிக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டது. ஆனால் இது எனது வீட்டாருக்குப் பிடிக்காததால் இருவரும் தனியாக வசித்து வந்தோம். நான் டிரைவராக வேலை செய்வதால், என போதிய வருமானம் கிடைக்கவில்லை. இதனால் 10 லட்சம் ரூபாய் வரை கடன் ஏற்பட்டது. கடனை எப்படி அடைப்பது என்று யோசிக்கும் போது தான், குழந்தையை கடத்தி விற்க முடிவு செய்தோம். அதன் படி, திருச்செந்தூர் முருகன் கோயிலில் வைத்து குழந்தையை கடத்தினோம்” எனக் கூறியுள்ளார்.