தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன் பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். கிட்டத்தட்ட ஒரு மாதம் சிறை தண்டனை அனுபவித்த அவர், கடந்த வாரம் ஜாமீனில் வெளியே வந்தார். இந்நிலையில், சிறையில் இருந்து வெளியே வந்ததும் அங்கு தான் பட்ட கஷ்டங்கள் குறித்தும், சிறையில் செந்தில் பாலாஜி, டிடிஎஃப் வாசன் ஆகியோருக்கு சிறப்பு வசதி வழங்கப்படுகிறதா? என்பது குறித்தும் பேசி உள்ளார்.
அவர் கூறுகையில், “சிறையில் இருக்கும்போது நரக வேதனை அனுபவித்தேன். பாத்ரூம் போவதற்கு ரொம்ப கஷ்ட பட்டேன். கீழ உட்கார்ந்தா எழுந்திருக்க முடியாது. அதுக்கு 2, 3 பேர் உதவி வேணும். ஒவ்வொரு முறையும் அடுத்தவங்களை தொந்தரவு பண்ணக்கூடாதுனு நானே செவுத்தை பிடிச்சு தவழ்ந்து தவழ்ந்து தான் போனேன். சிறையில் முட்டி போட்டு முட்டி போட்டே என் முட்டியே கொளஞ்சி போச்சு. எனக்கு சிறப்பு வசதி கிடைக்கா போனதுக்கு என்னுடைய எதிர் தரப்பு தான் காரணம்.
எல்லா பிரபலங்களுக்கு சிறையில் எல்லா வசதியும் கிடைக்கும்னு சொல்றது தவறானது. செந்தில் பாலாஜி சாருக்கு புஹாரில இருந்து பிரியாணி வருது, அது வருது இது வருதுனு வெளில பேசிக்கிறாங்க. ஆனா, உள்ள அவர் ரொம்ப எளிமையான வாழ்க்கை வாழ்கிறார். ரொம்ப கஷ்டப்பட்டுக்கிட்டு தான் இருக்கார். ஜெயில்ல மத்தவங்க என்ன சாப்பிடுறாங்களோ அதை தான் அவரும் சாப்பிடுகிறார். அதுவும் உப்பு சப்பு இல்லாம தான் சாப்பிடுகிறார்.
கடைசியா என் தலைவன் டிடிஎஃப் வாசன் உள்ள வந்ததும் ஜெயிலே கதறுது. குருநாதா இங்கயுமாங்கிற மாதிரி கையில் கட்டோட உள்ள வந்தான். அங்க தனி செல்லில் தான் வச்சிருந்தாங்க. அவரு வழக்கம்போல அங்க உள்ள போலீசையும் வா செல்லம், போ செல்லம்னு சொல்லிட்டு இருக்காரு. ஒருநாள் அவர் பைக்கை எரிக்க சொல்லிட்டாங்கனு தீர்ப்பு வருது, உள்ளே இருக்கும் கைதிகள் எல்லாம் கோலாகலமா கொண்டாடுனாங்க” என கூறியுள்ளார்.