தமிழக அரசு அவ்வப்போது ஐஏஎஸ் அதிகாரிகள் உள்ளிட்ட உயர் பொறுப்பில் இருக்கும் அரசு அதிகாரிகளை இடமாற்றம் செய்து உத்தரவிட்டு வருகிறது. அதன்படி நேற்றைய தினம் பல்வேறு அரசு துறைகளின் உள்ள 7 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது தமிழக அரசு.
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் தொடர்பாக தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா அறிக்கை வெளியிட்டார். அதன்படி, வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் முதன்மை செயலாளராக அபூர்வா நியமிக்கப்பட்டுள்ளார். ஜெகன்நாதன் வணிக வரித்துறை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை செயலாளராக சமயமூர்த்தி நியமனம். கோபால் கூட்டுறவுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அச்சு மற்றும் எழுதுபொருள் துறை ஆணையராக சோபனா நியமிக்கப்பட்டுள்ளார். ரமேஷ் சந்த் மீனா, திட்டம் மற்றும் வளர்ச்சித் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளராக நியமனம். தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக கவிதா ராமு நியமிக்கப்பட்டுள்ளார்.