சூரமங்கலம் பகுதியில் அண்ணன் – தம்பி சேர்ந்து பள்ளி மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்து வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம், பனங்காடு ஆண்டிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விஜயகுமார், ஒரு டெக்வாண்டோ பயிற்சியாளராகப் பணியாற்றி வருகிறார். இவர், தனது பயிற்சி மையத்தில் உள்ள சுமார் 10-க்கும் மேற்பட்ட சிறுமிகளுக்கும் பயிற்சி அளித்து வருகிறார். மேலும், வெளி மாவட்டங்களில் நடைபெறும் போட்டிகளுக்கு மாணவிகளை அழைத்துச் செல்வது வழக்கம்.
அந்த வகையில், கடந்த மாதம் 6ஆம் தேதி, ஒரு வெளி மாவட்டத்தில் நடந்த பயிற்சி போட்டிக்கு சில மாணவிகளை விஜயகுமார் அழைத்துச் சென்றுள்ளார். இதற்கிடையே, அவரது உறவினரின் இறப்புச் செய்தி கிடைத்ததால், அவர் மாணவிகளின் பொறுப்பை தனது தம்பி கணேசனிடம் ஒப்படைத்துவிட்டுச் சென்றுள்ளார்.
இந்நிலையில், சம்பவத்தன்று இரவு, கணேசன் 14 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த மாணவி, பெற்றோரிடம் இதுகுறித்து தெரிவிப்பதாக கூறியுள்ளார். இதைக் கேட்ட கணேசன் பயந்துபோய், உடனடியாக தனது சகோதரர் விஜயகுமாருக்குத் தகவல் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, உடனே அங்கு வந்த விஜயகுமார், அந்த மாணவியின் செல்போனை பறித்துக்கொண்டு, இந்தச் சம்பவத்தை வீட்டில் யாரிடமும் சொல்லக்கூடாது என மிரட்டியுள்ளார். ஆனால், அந்த மாணவி தனது தோழியின் செல்போன் வழியாகத் தனது பெற்றோரிடம் அனைத்தையும் தெரிவித்துள்ளார். இதையடுத்து, பெற்றோர் சூரமங்கலம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து இன்ஸ்பெக்டர் கவிதா, இந்தச் சம்பவம் தொடர்பாக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, பயிற்சியாளர் விஜயகுமாரை கைது செய்தார். பின்னர் தலைமறைவான கணேசன், போலீசில் சரணடைந்தார். விசாரணையின்போது மேலும் அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகின.
விஜயகுமார் மற்றும் அவரது தம்பி கணேசன் இருவரும் இணைந்து பல மாணவிகளுக்குப் பாலியல் தொல்லைகள் கொடுத்துள்ளனர். விஜயகுமார், அதிமுக கிழக்கு ஒன்றியத்தின் தகவல் தொழில்நுட்பப் பிரிவின் ஒன்றிய இணைச் செயலாளராகவும், அவரது தம்பி கணேசன் ஆண்டிப்பட்டியின் 51-ஆவது பூத் அதிமுக கிளைச் செயலாளராகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது.