தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக இருப்பவர் ஜெயமணி. இவர், லக்கி மேன் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் சென்னையில் வசித்து வருகிறார். இந்நிலையில் தான் கடந்த 18ஆம் தேதி தேதி நடிகர் ஜெயமணியும் அவரது நண்பர் மாரிமுத்துவும் சென்னை வேளச்சேரி பீனிக்ஸ் மால் அருகே உள்ள மாநகராட்சி பூங்காவுக்கு சென்றுள்ளார்.
அப்போது, பூங்காவில் ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தின் 7-வது நீதிமன்ற மாஜிஸ்திரேட் திருமால் நடைபயிற்சி செய்து கொண்டிருந்தார். இந்த வேளையில் நடிகர் ஜெயமணி, தனது நண்பர் மாரிமுத்துவுடன் சேர்ந்து நீதிபதி திருமாலை திட்டியுள்ளனர். ஆபாச வார்த்தைகளை பயன்படுத்தி திட்டியதோடு அவர்கள் மாஜிஸ்திரேட் நீதிபதி திருமாலை தாக்க முயன்றதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக மாஜிஸ்திரேட் திருமால் சார்பில் சென்னை கிண்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
அதன் பேரில் அவர் மீது மொத்தம் 3 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து ஜெயமணி மற்றும் அவரது நண்பர் மாரிமுத்து ஆகியோரை கிண்டி போலீசார் அதிரடியாக கைது செய்தனர். மேலும் அவர் மீது பதிவு செய்யப்பட்ட பிரிவுகள் அனைத்தும் காவல் நிலைய ஜாமீனுக்கு உட்பட்டதாகும். இதையடுத்து, ஜெயமணி மற்றும் அவரது நண்பரை காவல் நிலைய ஜாமீனில் போலீசார் விடுவித்தனர்.