மோசடிகளை தடுக்கும் வகையில், பெண்களுக்கு வழக்கப்பட்டு வரும் ரூ.1000 உதவித்தொகை திட்ட விவகாரத்தில் இன்னும் பல பயனர்களின் பெயர்களை பட்டியலில் இருந்து நீக்க தமிழ்நாடு அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
குடும்பத்திற்காக வாழ்நாள் முழுவதும் ஓயாமல் உழைத்துக்கொண்டிருக்கும் பெண்களின் உழைப்பிற்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில், அவர்களுக்கு ஆண்டிற்கு ரூபாய் 12,000/- உரிமைத்தொகை வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டமானது பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூகத்தில் அவர்கள் சுயமரியாதையோடு வாழ்வதற்கு வழிவகுக்கும் உயரிய நோக்கம் கொண்டது.
அரசின் ஒவ்வொரு மக்கள் நலத்திட்டமும், தேவையுள்ள ஒருவர்கூட விடுபடாமல் தகுதியான பயனாளிகளைச் சென்றுசேர வேண்டும் என்பதில் தமிழ்நாடு அரசு அதிக அக்கறையுடன் செயல்பட்டுவருகிறது. அதுபோலவே, கலைஞர் மகளிர் உரிமைத்தொகைத் திட்டத்திற்கும் தகுதியான பயனாளிகளைக் கண்டறிவதற்கான விதிமுறைகள் வகுக்கப்பட்டு.
1.63 கோடி விண்ணப்பங்கள் பெறப்பட்டு, விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன. அவற்றில் 1.06 கோடி தகுதியான பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டு, அவர்களுக்கான உரிமைத் தொகையானது ஒவ்வொருவருக்கும் தலா ரூபாய் 1000/- வீதம் முதல் தவணையாக மொத்தம் ரூபாய் 10,65,21,98,000/- அவர்களின் வங்கிக் கணக்கின் வாயிலாக அளிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் மாதத்திற்கான மகளிர் உரிமைத்தொகை வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட வேண்டிய அக்டோபர் 15, அரசு விடுமுறை நாள் என்பதால், இத்திட்டத்தின் கீழ் பயனடையும் அனைத்து மகளிருக்கும், ஒரு நாள் முன்னதாகவே உரிமைத் தொகையினை அனுப்பி வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தகுதியான பயனாளி ஒருவர்கூட விடுபட்டுவிடக் கூடாது என்ற நோக்கில், திருநங்கைகள் உள்ளிட்ட பல்வேறு தகுதியான குடும்பத் தலைவியர் கண்டறியப்பட்டு அக்டோபர் மாதத்திற்கான கூடுதல் பயனாளிகளாக 5,041 பேர் இத்திட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளனர். அதேபோல், உரிமைத்தொகை பெற்றுக்கொண்டவர்களில் இறந்துபோனவர்கள் மற்றும் தகுதியற்றவர்கள் எனக் கண்டறியப்பட்ட 8, 833 பெயர்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளன.
இந்தநிலையில், இறந்தவர்களின் பெயரில் விண்ணப்பம், மோசடிகள் கண்டறியப்பட்டு வருவதால் இந்த விவகாரத்தில் கடுமையாக இருக்க தமிழ்நாடு அரசு முடிவெடுத்துள்ளதாகவும், ஆகையால் இனி வரும் நாட்களில் இன்னும் பல பயனர்களின் பெயர்களை பட்டியலில் இருந்து நீக்க முடிவெடிக்கப்பட்டுள்ளதாக அரசு வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.