திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே உள்ள வில்வாரணி கிராமத்தில் குன்றின் மீது பேரழகோடு வீற்றிருக்கிறார் முருகப் பெருமான். இந்த கோயில் சுமார் 1200 ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்தது. கார்த்திகை பெண்கள், 27 நட்சத்திரங்கள், தேவர்கள், ஏன் நாகங்கள் கூட தினமும் வந்து வழிபடும் அரிய ஆலயம் இது என்று கூறப்படுகிறது. இந்த கோவில் அமைந்துள்ள மலை, நட்சத்திர கிரி என்றும் பக்தர்களால் அழைக்கப்படுகிறது.
இந்த மலைக்கோவில், முருகப் பெருமான் வள்ளி, தெய்வானையுடன் அமர்ந்து சிவபெருமானுக்கு நித்திய பூஜை செய்யும் தனித்துவமான திருத்தலமாக விளங்குகிறது. இங்கு முருகப் பெருமான் சுயம்புவாக, தனித்தன்மையோடு காட்சியளிக்கிறார். அறுபடை வீடுகளில் சிரித்த முகத்தோடும், மயில் வாகனத்தோடும் காட்சி தரும் முருகன், இங்கு வேலோடு நின்ற வானுயர்ந்த சிலையாக காட்சி தருகிறார்.
மேலும், சிவனும் முருகனும் ஒன்றே என்பதை உணர்த்தும் விதமாக, கருவறையில் நாகாபரணத்துடன் முருகரும், சுயம்பு லிங்கமாக சிவபெருமானும் ஒருசேர அருள் பாலிக்கின்றனர். இந்த திருக்கோவிலின் வரலாறு சுவாரஸ்யமானது. ஒருமுறை, முருகப் பெருமான் விளையாட்டாக எய்த அம்பு ஒன்று தவமிருந்த சப்த ரிஷிகளின் தலைகளை துண்டித்தது. இந்த பாவத்தை போக்க, அன்னை பார்வதியின் அறிவுரைப்படி, முருகன் இந்த வில்வராணி மலையில் அமர்ந்து தவம் செய்தார்.
அப்போது, அவர் 7 மலைகளில் சண்டிகேஸ்வரரையும், 7 மலைகளில் சிவலிங்கத்தையும் பிரதிஷ்டை செய்து வழிபட்டார். இந்த 14 ஆலயங்களுக்கும் பூஜை செய்த சிவாச்சாரியார்களின் கனவில் தோன்றிய முருகன், “நட்சத்திர கிரியில் நான் சுயம்புவாக வீற்றிருக்கிறேன். இங்கு வந்து என்னை வழிபட்டால், அனைத்து நட்சத்திர தோஷங்களையும் நீக்கி அருள் புரிவேன்” என்று கூறினார்.
முருகனின் அருளால், ரிஷிகளின் ரத்தம் நன்னீராக மாறி, இன்று செய்யாறு நதியாக ஓடி, வங்காள விரிகுடாவில் கலக்கிறது. பிரம்ம முகூர்த்த வேளையில், நாகங்கள் வழிகாட்ட ஒரு சப்பாத்திக் கள்ளி புதரின் நடுவே சுயம்பு ரூபமாக முருகப் பெருமான் காட்சி கொடுத்ததாக புராணங்கள் கூறுகின்றன. இந்த அற்புத நிகழ்வை, காஞ்சி மற்றும் அருணாச்சல புராணங்களும் உறுதி செய்கின்றன.
முருகப் பெருமானின் திருவாக்கால், “இந்த சூரிய சந்திரர் உள்ள வரை, 27 நட்சத்திரங்களும், நாகங்களும் என்னை வழிபடும்” என்று அருளப்பட்ட இந்த ஆலயம், பக்தர்களுக்கு பெரும் நம்பிக்கையை அளிக்கிறது. நட்சத்திர கிரியில் அருளும் முருகப் பெருமானை வழிபட்டால், நாக தோஷம், புத்திர தோஷம், திருமண தோஷம் உட்பட அனைத்து விதமான தோஷங்களும் நீங்கும் என்பது ஐதீகம். செவ்வாய் கிழமைகளில் தேனால் அபிஷேகம் செய்து, சம்பா அரிசி சாதம் படைத்து, செவ்வரளி மாலை சாற்றி அன்னதானம் செய்பவர்களுக்கு நிச்சயம் நல்ல பலன்கள் கிடைக்கும்.
ஜாதகத்தில் கிரகங்கள் மோசமான நிலையில் இருந்தாலும், ஒரு கர்மாவின் அடிப்படையில் இந்த நட்சத்திர கோவிலுக்குச் சென்றால், நிச்சயம் வாழ்வில் நல்ல மாற்றங்கள் ஏற்படும் என்று பக்தர்கள் நம்புகின்றனர். இந்த புனிதமான கோவிலுக்கு சென்று, முருகப்பெருமானின் அருளைப் பெற்று, உங்கள் வாழ்க்கையை வளமாக்கிக் கொள்ளுங்கள்.
Read More : ஸ்மார்ட்போன் சார்ஜர்கள் எப்போதும் வெள்ளை நிறத்தில் இருப்பது ஏன்?. இத்தனை விஷயம் இருக்கா?.



