சென்னை நெற்குன்றத்தைச் சேர்ந்த 11-ஆம் வகுப்பு மாணவன் ஒருவன், தனது காதலியை பார்க்கச் சென்றபோது, அவரது தந்தையால் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முகப்பேரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பயிலும் 18 வயது மாணவன், மாணவி ஒருவருடன் காதல் உறவில் இருந்துள்ளார்.
இந்த காதல் விவகாரம் மாணவியின் பெற்றோருக்குத் தெரியவர, அவர்கள் மாணவியை அய்யனாவரத்தில் உள்ள அவரது பெரியம்மா வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனாலும், செல்போன் மூலம் இருவரும் பேசி வந்துள்ளனர். இந்நிலையில், சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த மாணவி, காதலனை வீட்டிற்கு வரவழைத்துள்ளார்.
மாணவன் புத்தகங்கள் வாங்க செல்வதாகக் கூறிவிட்டு, காதலியின் பெரியம்மா வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது, வீட்டிற்கு வந்த மாணவியின் பெரியம்மா, இருவரையும் பார்த்து அதிர்ச்சியடைந்து, உடனடியாக கதவை பூட்டி மாணவனை உள்ளே சிறைவைத்துள்ளார். பின்னர், மாணவியின் தந்தை சரவணனுக்கு தகவல் கொடுத்தார்.
இதையடுத்து, அங்கு வந்த சரவணன், மாணவனை அறையில் அடைத்து வைத்து, இரும்பு வளையத்தால் கொடூரமாக தாக்கியுள்ளார். மேலும், தாக்குதலில் ரத்தம் சிந்தியபோது, மாணவன் அணிந்திருந்த சட்டையால் தரையில் உள்ள ரத்தத்தை சுத்தம் செய்ய சொல்லியதாகவும் மாணவனின் பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதற்கிடையே, மதியம் 2 மணிக்கு வீட்டிலிருந்து வெளியே சென்ற மகன், இரவு 10 மணி வரையிலும் திரும்பாததால், பெற்றோர் தேடியுள்ளனர். அப்போது, புளியந்தோப்பு காவல் நிலையத்தில் இருந்து அழைப்பு வந்துள்ளது. அங்கு சென்ற பெற்றோர், மகனின் காயங்களை பார்த்து அதிர்ச்சியடைந்து சரவணனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பின்னர், சம்பவம் அய்யனாவரத்தில் நடந்ததால், அய்யனாவரம் காவல் நிலையத்திற்குச் செல்லுமாறு புளியந்தோப்பு போலீசார் அனுப்பியுள்ளனர். ஆனால், அய்யனாவரம் காவல் நிலையம் வழக்குப் பதிவு செய்ய மறுத்துள்ளது. பின்னர், தலைமைச் செயலக காலனி காவல் நிலையத்தில் புகாரளித்த பின்னரே வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது மாணவன் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். போலீசார் இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



